லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜவுக்கு எதிராக மூள்றாவது அணி அமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் நாடு முழுவதும் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 7ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கிடையில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று புரியாத நிலை உள்ளது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல்வாதிகள் கூறிக் கொண்டாலும் உள்ளுக்கு அவர்களுக்கு நடுக்கம்தான் இருக்கும். ஒரு பக்கம் காங்கிரஸ் தாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறிக் கொண்டு உள்ளது. இதேபோல் பாஜவும் நாங்களே மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள்.
இந்நிலையில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் மும்முரம் அடைந்துள்ளார். அந்த வகையில் நேற்று டில்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, ஆந்திர தெலுங்கு தேச கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவல்களும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மூன்றாவது அணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை நாடிப்பிடித்து பார்க்கவே சந்திரபாபு நாயுடு இப்படிப்பட்ட சந்திப்புகளை நடத்தி வருகிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.