முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். முருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர். அந்த வகையில் இந்தாண்டும் வைகாசி விசாகத்திருவிழா சிறப்பாக நடந்தது.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கோலாகலமாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட்டது. இன்று முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதற்காக இரவு முழுவதும் காத்திருந்த ப்க்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடந்தது பக்தர்கள் கடலில் புனித நீராடினர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை வழிபட்டனர். மேலும் வேலால் அலகு குத்தியும், நேர்த்தி கடனையும் செலுத்தினர்.
இந்த திருவிழாவை ஒட்டி பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.