உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடராக நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் தாக்கம் வற்றாப்பளை அம்மன் ஆலயப் பொங்கல் நிகழ்விலும் தாக்கம் செலுத்தியிருப்பதாக தெரியவருகிறது. வருடாந்தம் ஐந்து இலட்சம் வரையான பக்தர்கள் நாடுமுழுவதில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பங்கேற்கின்ற குறித்த ஆலயத்தின் இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற ஆலயப் பொங்கல் நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடலில் பாதுகாப்புத் தரப்பினரும் பங்குகொண்டு கலந்துரையாடியிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில் வாகனங்களுக்கு தடை விதிப்பது, மற்றும் உணவுக் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளுக்கு தடைவிதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதேவேளை தூக்குக்காவடி நேர்த்திக்கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரமே மேற்கொள்ளலாம் என்று ஆலய நிர்வாகம் அறிவித்திருக்கிறது. தூக்குக்காவடி எடுக்கின்ற பக்தர்கள் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் படைத்தரப்பின் சோதனை நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.