Thursday 28th of March 2024 06:32:58 PM GMT

LANGUAGE - TAMIL
வலுவடையும் அதிகார மோதல்! பயன்படுத்துமா தமிழ்த் தரப்பு?

வலுவடையும் அதிகார மோதல்! பயன்படுத்துமா தமிழ்த் தரப்பு?


நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கத் துறைக்கும் இடையில் மீண்டும் பலப்பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நாட்டின் அதி உயர் அரச தலைவராகிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவே இந்த பலப்பரீட்சை.

இந்தப் பலப்பரீட்சையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சியும், தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாகிய ஏயை பிரச்சினைகளும் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன், நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல், அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கி வந்த முழுமையான ஆதரவும் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன.

இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு வெளிச்சக்திகளின் துணையையும், அவற்றின் தலையீட்டையும் நம்பிச் செயற்பட வேண்டிய நிலைமைக்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உந்தித் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மிகக் குறுகிய நேர இலங்கை விஜயமும், அதற்குப் பின்னரான நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்வு முயற்சிகளுக்கு, புதுடில்லி மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்பாடும் இதனை, உறுதி செய்திருக்கின்றன.

காற்றில் பறந்துள்ள ஜனநாயகத் தத்துவம்

நிறைவேற்ற அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியா அல்லது சட்டவாக்கத் துறையாகிய நாடாளுமன்றத்தின் வழியாக அதிகாரங்களைப் பெற்றுள்ள பிரதமரா யார் பெரியவர்? இவர்களில் கூடுதல் அதிகாரம் கொண்டவர் யார்? - இதனைத் தீர்மானிப்பதற்கான போட்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அடிக்கடி ஈடுபடுவது இந்த ஆட்சியில் சாதாரண நிகழ்வாகியுள்ளது.

நீதித் துறை, சட்டவாக்கத்துறையாகிய நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மற்றும் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தைக் கொண்ட ஊடகத்துறை ஆகிய நான்கு துறைகளும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகக் கருதப்படுகின்றன. இந்த நான்கு துறைகளும் தனித்தனியே தன்னளவில் தனித்துவமான அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. அந்தத் தனித்துவத்தில் ஒன்றையொன்று மேவிச் செற்பட முடியாது.

இறைமையுள்ள நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாத்து, நல்லாட்சி புரிய வேண்டும் என்ற அடிப்படையில்; ஒன்றுடன் ஒன்ற இணங்கிச் செயற்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் தாற்பரியமாகும். இந்த ஜனநாயகத் தத்துவம், இந்த ஆட்சியில் காற்றில் பறக்கவிடப்படுகின்ற போக்கையே காண முடிகின்றது.

சட்டவாக்கத்துறை, நீதித்துறை என்பவற்றை மீறியும், அவற்றுடன் மோதியும் நிறைவேற்று அதிகாரம் என்ற தனது அதிகாரத்தை மேலாண்மை நிலையில்; நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடமும் ஒரு தடவை முயன்றிருந்தார்.

அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகள்

அவருடைய முயற்சி ஜனநாயக விரோதப் போக்கு மட்டுமல்ல. நாட்டின் அதி உயர் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முரணானது. விரோதமானது.

பதவி வழியில் நாட்டின் அதி உயர் அதிகார பதவியாக ஜனாதிபதி பதவி திகழ்ந்த போதிலும், அந்தப் பதவிக்கென சில வரையறைகளும், செயன்முறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனத்திற் கொள்ளவில்லை. கருத்திற் கொண்டு செயற்படவுமில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான அதிகாரப் போட்டியில், பழிவாங்கும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து அவரைத் தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஆட்சிழயைக் கவிழ்த்து, ஓர் அரசியல் புரட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றியிருந்தார்.

மீசையில் மண் ஒட்டாத மனப்போக்கு

பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்டிருந்த அமைச்சர் அவையையும் தற்துணிவில் கலைத்து, ,புதிய அமைச்சர்களை அவர் நியமித்திருந்தார். ஆனால், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவுமில்லை. பிரதமருக்கான அதிகாரபூர்வ இல்லமாகிய அலரி மாளிகையில் இருந்து அவர் வெளியேறவுமில்லை. பிரதமர் பதவியை அவர் இறுக்கமாகப் பற்றிப் பிடித்திருந்தார். இதனால் நாட்டில் இரண்டு பிரதமர்கள் பதவி வகித்த விநோதமான ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தது.

ஆனாலும், புதிய பிரதமராகிய மகிந்த ராஜபக்ச ஒரு நாள்கூட, பிரதமருடைய அலுவலகத்திற்குச் செல்லவில்லை. செல்ல முடியவில்லை. அதேபோன்று புதிய அமைச்சரவையும் ஒரு தடவைகூட, கூடவில்லை. கூடமுடியவில்லை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போட்டி தீவிரமடைந்தது. நாடாளுமன்றம் போர்க்களமாகியது. அரசாங்க நிர்வாகம் செயலிழந்து போனது. நாட்டில் அரசாங்கம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அரசியல் நெருக்கடி நிலைமையை உருவாக்கிய அரச தலைவர்கள் கண்டனத்துக்கு உள்ளாகினர்.

ஜனாதிபதியின் ஏதேச்சதிகாரப் போக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு விரோதமானவை என பொருள்கோடல் செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்ததுடன், புதிய அமைச்சரவையை உருவாக்கி அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்த வழிசமைத்தது.

ஆனாலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக, அந்தப் பதவிக்கென வகுத்துரைக்கப்பட்ட சிறப்புரிமையின் காரணமாகவோ என்னவோ,எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவருடைய அரசியல் புரட்சி மண்கௌவிய போதிலும், மிகச் சாதாரண முறையில் மைத்திரிபால சிறிசேன, மீசையில் மண் ஒட்டவில்லையே என்ற போக்கில் ஜனாதிபதி பதவியில் தொடர்ந்து நிலைத்திருந்தார்.

பிரதமரைப் புறக்கணித்த பாதுகாப்புச் சபை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கு விரோதமான அரசியல் நெருக்கடியின் பின்னர், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து செயற்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அரசியல் ரீதியான நெருக்கம் மிக மோசமாக விரிவடைந்தது,

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டப்படுகின்ற பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவில்லை. அவர் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார். சுமார் ஆறு மாதங்கள் நீடிநத்த இந்த நிலைமையிலேயே 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளினால், கொழும்பு, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது, இதனால், அப்பாவிகளான 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து இந்திய புலனாய்வு பிரிவினரால், தாக்குதல் நடைபெற்ற தினத்துக்கு முன்னதாக மூன்று தடவைகள் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அந்தத் தகவல்கள் தனக்குக் கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துரைத்திருந்தார். அந்தத் தகவல்கள் தனக்கும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்திருந்த ப்pரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புச் சபை கூட்டங்களுக்கு, தன்னை அழைப்பதில்லை என்று ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற தினத்தன்று சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றியும், அதனால் ஏற்பட்டிருந்த சேதங்கள் குறித்தும் அறிந்திருந்த போதிலும், நாட்டுத் தலைவர் என்ற ரீதியிலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் உடனடியாக நாட்டுக்குத் திரும்பவில்லை. அவர் மறுநாள் இரவுதான் நாட்டுக்குத் திரும்பியிருந்தார்.

சிறுபிள்ளைத் தனம்...?

சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்குரிய பொறுப்பை ஏற்றிருக்கவில்லை. அதற்கு உரிய முறையில் பொறுப்பு கூறவுமில்லை. இதேபாணியில்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடந்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் தீவிரமாக இருந்தனரே தவிர, பொறுப்புள்ள அரச தலைவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய உண்மை நிலைமை என்ன என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்த அதேவேளை, நாடாளுமன்றத்தினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாக இரண்டு இடைக்கால அறிக்கைகளும், இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட போதிலும், அவற்றின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஊடகஙக்களின் பிரசன்னத்துடன் நடத்தப்பட்டு, அங்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விபரங்கள் முழுமையாக ஊடகங்களில் வெளிவந்தன.

இந்த வெளிப்படைத் தன்மையை விரும்பாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரியதுடன், தெரிவுக்குழு உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பையும் விடுத்திருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கை புறந்தள்ளப்பட்டது, உறுப்பினர்களும் ஜனாதிபதியைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.

இதனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ என்னவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படாவிட்டால், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டமாட்டேன் என தெரிவித்து, அவ்வாறே நடந்து கொண்டார். இதனால் புதிதாக அரசியல் நெருக்கடி நிலைமையொன்று உருவாகியது. இதன் மூலம், பொறுப்பு வாய்ந்த உயர்ந்த பதவியொன்றை வகிக்கின்ற ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டார் என்று அரசியல் விமர்சகர்கள் வர்ணித்திருக்கின்றார்கள்.

பொறுப்போடு முன்னெடுக்கப்படுமா?

இத்தகைய ஒரு பின்னணியில்தான் இரண்டாவது தடவையாக இந்தயப் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திரமோடி தனது பதவியேற்பின் பின்னர் ஒரு குறுங்கால விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்தார். பல்வேறு தரப்புக்களுடன் பேச்சக்களை நடத்திய அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும், அரசாங்கததின் பொறுப்பற்ற, புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியப் பிரதமருக்கு எடுத்துரைத்து, அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என கோரியிருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கெண்ட மோடி, கூட்டமைப்பினரை இந்தியாவில் பேச்சுக்கள் நடத்துவதற்காக அழைத்துள்ளார்.

இநதிய அராசங்கத்துடன் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு – குறிப்பாக அரசியல் தீர்வை எட்ட முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகாரப் போட்டியிலும், பொறுப்பு கூறுகின்ற பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும் தீவிர கவனம் செலுத்துகின்ற அரசாங்கத்துடன், அரசியல் தீர்வுக்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தோ அல்லது ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தோ பேச்சுக்கள் நடத்த முடியாத நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையும், பிரச்ச்pனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இந்திய அனுசரணையின் சமிக்ஞையையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுகப் பற்றிப் பிடித்துள்ளது.

ஆயினும், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமும், மனித உரிமைப் ; பேரவையும், போர்க்குற்றச் செயற்பாடுகள் மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றுக்கு பொறுப்பு கூறும் விடயத்தில் ஒப்புதல் வழங்கி இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசுக்கு உரிய வகையில் அழுத்தங்களைப் பிரயோகித்து, அதனைச் செயற்படச் செய்யாத ஒரு சூழலில் இந்தியாவின் அனுசரணை செயற்பாடுகள் எந்த அளவுக்கு வலுவுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை.

அதேவேளை, இந்தியாவின் இந்த அனுசரணை அணுகுமுறையை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்று நம்பிக்கை வெளியிட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அந்த வாய்ப்பை பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளை, தமிழ்த்தேசிய எந்த அளவுக்கு பொறுப்போடு முன்னெடுக்கப் போகின்றது என்பதும் தெரியவில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE