ஒன்றல்ல. இரண்டல்ல.. பலவகை பயன்களை கொண்ட அம்மான் பச்சரிசியின் முழு பயன்கள் உங்களுக்கு தெரியுமா? இது அரிசி வகை அல்ல... கீரை வகையை சேர்ந்த மூலிகை தாவரம்தான்.
துவர்ப்பு, இனிப்புச் சுவையை கொண்டது அம்மான் பச்சரிசி. உடலுக்கு குளிர்ச்சித் தன்மையை அளிக்கும். இதன் பயன் ஏராளமானது. குடல் புழுக்களைக் கொல்லும் உள் உறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும் குணம் கொண்டது. சுவாசத்தைக் சீராக்கும், இருமலைக் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இந்த அம்மான் பச்சரிசி சிறு செடி வகையைச் சேர்ந்தது. தரிசு நிலத்திலும் நன்கு வளரும். மேலும் சாலை ஓரங்கள் மற்றும் ஈரம் உள்ள நிலங்களில் வளரும் தன்மை கொண்டது. இது குறிப்பிட்ட காலத்தில் மட்டும்தான் கிடைக்கும் என்றில்லை. ஆண்டு முழுவதும் இது வளரும் தன்மை கொண்டது. 50 செ.மீ. வரை உயரமாக வளரும்.
இந்த செடியின் இலைகள் வித்தியாசமானவை. இலைகள் எதிரெதிராக இருக்கும். சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு வண்ணத்தில் காணப்படும். இதன் பூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும். அம்மான் பச்சிரிசி தாவரத்தை எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு மற்றொரு பெயரும் உண்டு. சித்திரப் பாலாடை என்பதுதான் அது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகமாக அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்து சுத்தப்படுத்தி, அரைத்து, எலுமிச்சம்பழ அளவிற்கு 1 டம்ளர் பாலில் கலக்கி தர வேண்டும். இதை தினமும் காலை, மாலை இருவேளை கொடுத்து வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
முக்கியமான ஒன்று... இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி மிகவும் பயன்படுகிறது. இதன் இலைகளை அரைத்து சிறிய எலுமிச்சம்பழ அளவு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலுடன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் இரத்தக் கழிச்சல் நோய் குணமாகும்.
இச்செடியின் பாலை முகத்தில் பருக்கள் மீது தடவி வந்தால் அது பட்டு போய் விடும். இதேபோல் முகத்தில் எண்ணெய் பசை இருந்தால் இதையும் நீக்கும். கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும்.
அம்மான் பச்சரிக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்றும் காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் இருப்பது மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.