இன்று 49வது பிறந்த நாளை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் நாகரீகம் இதுதான் என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த மாதத்தில் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தல் பிரசாரத்தில் தேசிய கட்சிகளான பாஜ., காங்கிரஸ் கட்சிகள் அனல் கிளப்பின. இதன் தலைவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக் கொண்டனர். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தொடர்ந்து பிரசாரத்தில் தாக்கி பேசினார்.
இதேபோல் பிரதமர் மோடியும் பிரசாரக் கூட்டத்தில் ராகுலுக்கு பதிலடி கொடுத்து வந்தார். பின்னர் தேர்தலில் பாஜ தனி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள்.
இதையடுத்து டுவிட்டரில், பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான அரசியல் நாகரீகம். இதை அனைத்து அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, டுவிட்டரில், #HappyBirthdayRahulGandhi, Rahul Gandhi Ji, Rahulji என்ற ஹேஸ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட பெரிய அளவிலான தோல்வியால் மனமுடைந்து போய் உள்ள ராகுல் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பிடிவாதமாக உள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை வைத்து அவரை சமாதானம் செய்ய கட்சியின் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
மேலும் பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.