ஒரே ஒரு மாணவருக்காக அரசு பாடசாலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெகு மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பார். அதாவது பிச்சை எடுத்து கூட படிக்கலாம் என்பதுதான். காரணம் கல்வி என்பது என்றும் அழிவில்லா சொத்து என்பதால்தான். இத்தகைய கல்வி இன்று வியாபார பொருளாகி விட்டது. இருப்பினும் ஒரே ஒரு மாணவருக்காக ஒரு பள்ளி திறக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
வால்பாறை தாலுகாவில் அரசு பள்ளிகள் 86 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இருப்பினும் தனியார் பள்ளிகள் மோகத்தால்இந்த பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைபோல் குறைந்து கொண்டே வருகிறது.
வால்பாறை, சுற்று வட்டாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்தான் அதிகளவில உள்ளனர். குறைந்த வருமானம், பல்வேறு வனவிலங்குகளின் தாக்குதல் என்று தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியூர்களுக்கு குடும்பத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் எஸ்டேட் பகுதி பள்ளிக் கூடங்களிலும் மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைவாகி வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை டேன்டீ எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான சின்னக்கல்லார் பகுதியில் அதிக எண்ணிக்கையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதனால் அப்பகுதியில் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொடக்கப்பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.
ஆனால் வருமானத்தை தேடி பல பகுதிகளுக்கு தொழிலாளர்கள் சென்று விட்டதால் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. தற்போது இந்த சின்னக்கல்லார் பகுதியில் 15 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இதனால் கடந்த ஆண்டு இங்குள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவிகளே இல்லாத நிலை. இதையடுத்து இங்கு செயல்பட்டு வந்த பள்ளி மூடப்பட்டு இங்கு பணியாற்றி வந்தவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளியான ராஜலட்சுமி என்பவர் தனது மகன் சிவா (5) வை அந்த பாடசாலையில் முதல் வகுப்பில் சேர்க்க விரும்பினார். ஆனால் பாடசாலையோ பூட்டப்பட்டு விட்டது. இதனால் பாடசாலையை திறக்க அவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். ஒரு மாணவராக இருந்தாலும் கல்வி பயில நினைப்பவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்பதை செயலில் காட்டியுள்ளனர் அதிகாரிகள்.
சிவா என்ற அந்த ஒரே ஒரு மாணவருக்காக பாடசாலை திறக்கப்பட்டது. இதனால் ராஜலட்சுமி மகிழ்ச்சி அடைந்து தனது மகனை பாடசாலையில் சேர்த்தார்.
ஒரே ஒரு மாணவருக்காக அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதற்கு சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதி மக்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.