நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமந்தா நடித்துள்ள படத்திற்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி.
பாடகி சின்மயி மீ டூவில் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து கோடம்பாக்கத்தையே கிடுகிடுக்க செய்தார். இதனால் இவர் பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். சின்மயி, பாடகி மட்டுமின்றி டப்பிங் கலைஞரும் கூட.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தல் உறுப்பினராக இருந்தால்தான் படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்க முடியும். பல நடிகைகளுக்கு சின்மயி டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார். மீடு பிரச்னையை அடுத்து அவர் சந்தித்த பிரச்னைகள் அதிகம்தான். இதில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கு காரணம் 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சின்மயி கூறுகையில் “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து முன்னறிவிப்பின்றி நீக்கிவிட்டனர். இனிமேல் என்னால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சந்தா கட்டாதது குறித்து எனக்கு தகவல் வரவில்லை” என்றார். பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவும் பெற்றார். இருப்பினும் கோலிவுட் சேர்ந்த யாரும் அவருக்கு டப்பிங் செய்ய சான்ஸ் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் டப்பிங் பேசியதாக டுவிட்டரில் சின்மயி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். நடிகை சமந்தா தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் சமந்தாவுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக சமந்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ படத்தில் நடிகை திரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.