"கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் பிரச்சினைக்கு எல்லை நிர்ணய சட்டமூலத்துக்கு அமைவாகவே தீர்வுகாண வேண்டும். அதற்கமைய இப்பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்."
- இவ்வாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"பிரதேசமொன்றின் எல்லைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது அப்பிரதேச அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரினதும் அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டும்.
கல்முனை தொடர்பில் 1993ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அது நிதி விதிமுறைகளின் கீழ் இணைத்து, செயற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், நாளை உரிய அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து கலந்துரையாடவுள்ளேன்" - என்றார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை இன்று திறந்துவைத்த பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.