நடுக்கடலில் தத்தளித்த பாம்பன் பகுதி மீனவர்கள் எண்மரை மீட்ட இலங்கை கடற்படை,இரண்டு மணி நேர விசாரணைக்கு பின் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 17 ம் தேதி காலை பாம்பன் குந்து கால் பகுதியைச் சேர்ந்த இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற பாக்கியம்,கார்வின்,வெனிஸ்டன்,பரகத்,ஜெர்சின் உள்ளிட்ட 8 மீனவர்கள் மீன்பிடி தொழில் முடித்து விட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்த போது திடீரென நடுக்கடலில் ஏற்பட்ட சூறைகாற்று காரணமாக தனுஷ்கோடி 7 வது மணல் தீடை அருகே கடல் நீர் நாட்டுபடகில் புகுந்ததால் நாட்டு படகு நடுக்கடலில் மூழ்கியது இதனால் படகில் உள்ள மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் ததந்தளித்தனர்.
அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும்,படகையும் மீட்டு சர்வ தேச கடல் எல்லையில் வைத்து விசாரனை நடத்தி,மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் வைத்து மீட்டதால் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீனவர்களை மீட்க சென்ற மண்டபம் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பலில் உள்ள இந்திய கடற்படை அதிகாரிகள் மீனவர்கள் படகு பழுது காரணமாக எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்கு வந்துவிட்டதால் மீனவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை கடற்படையிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இந்திய அரசு சார்பாக கொழும்பு கடற்படை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பபட்டதையடுத்து மீனவர்கள் நடுக்கடலில் வைத்து மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்க்கு அழைத்துவரப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றது.