சபரிமலைக்கு செல்ல ஹெலிகாப்டர் சேவை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
சபரிமலைக்கு விமானத்தில் பயணம் செய்பவர்கள் கொச்சி விமான நிலையத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் பம்பை செல்ல வேண்டும். இதற்கு பதிலாக இனி இந்தாண்டு முதல் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களான நவம்பர் 17-ந்தேதி தொடங்கி ஜனவரி 16 வரை இந்த ஹெலிகாப்டர் சேவை பயன்பாட்டில் இருக்கும். 4 பேர் பயணம் செய்யலாம். காலடியில் இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டரில் செல்ல முடியும். இதற்காக காலடியிலும், நிலக்கல்லிலும் ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொச்சி விமான நிலையம் அமைந்துள்ள நெடும்பஞ்சேரியில் இருந்து காலடி வரை காரில் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்யலாம். ஹெலிகாப்டரில் பயணம் செய்பவர்களுக்கு சலுகை கட்டணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் கேரளா சபரிமலைக்கு தரிசனம் செய்ய வரும் வெளி மாநில பயணிகளுக்கு இது சிறந்த ஏற்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.