அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். முக்கியமாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து பேச வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தியுள்ளனர்.
நாளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் நிதி நிலைமை மோசமாக உள்ளதால் நிறுத்தப்பட்ட நிதியுதவியை மீண்டும் இம்ரான்கான் அளிக்க கேட்கலாம் என்ற தகவல் பரவியது.
ஆனால் நிறுத்தப்பட் உதவிகள் இனி தொடராது என்று முன்பே அமெரிக்கா அறிவித்துவிட்டது. இந்நிலையில் இந்த சந்திப்பின் போது தீவிரவாதம் குறித்து மட்டுமின்றி, பாகிஸ்தான் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைக் களைவது குறித்தும் வலியுறுத்த வேண்டும் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்திய சம்பவத்தில் கடந்த 2016 ஆண்டில் ஆயிரத்து 521 பேருக்கும், இந்த ஆண்டு தொடக்கத்தில் 681 பேருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டது.
சிறுபான்மையினரான இந்து, கிறிஸ்தவப் பெண்களைக் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து முதியவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகள் ஆதரவும் உள்ளது. இதுபோன்ற சமூக அநீதிகள் குறித்து பேச வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக சேவகர்கள், எழுத்தாளர்களை கடத்திக் கொல்வது குறித்தும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.