அம்மாவுடன் வந்த சுட்டிப்பையன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது பிடியிலிருந்து நழுவி கன்வேயர் பெல்ட்டுகளில் மாறி மாறி பயணம் செய்து அதிகாரிகளை அலைக்கழித்த சம்பவம் அட்லாண்டா விமான நிலையத்தில் நடந்துள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தில் உள்ளது அட்லான்டா விமான நிலையம். இங்கு தனது அம்மாவுடன் வந்துள்ளான் 2 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன். சூட்டிகையும், சுட்டித்தனமுமாக இருந்த அவனை தன் கைப்பிடியிலேயே வைத்துள்ளார் அவரது அம்மா.
பரிசோதனைக்காக நின்றிருந்தபோது தனது அம்மாவிற்கு "டேக்கா" கொடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் பிடியிலிருந்து நழுவி விட்டான் அந்த சிறுவன். அவன் அருகில் இருந்த உடமைகளை ஏற்றி செல்லும் கன்வேயர் பெல்டில் ஏறி விட்டான்.
இந்நிலையில் மகனை காணவில்லை என தேடி தவித்துள்ளார் அந்த பெண். பின்னர் அவர் தனது மகனை காணவில்லை என்று அதிகாரிகளுக்கு தெரிவிக்க, அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான் அந்த சிறுவன் உடமைகள் செல்லும் கன்வேயர் பெல்டில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது.
பிறகு சக அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு கன்வேயர் பெல்ட்டாக அலைந்து திரிந்து கடைசியில் அந்த சிறுவனை மீட்டுள்ளனர். கன்வேயர் பெல்ட்டுகளில் மாறி, மாறி பயணம் செய்ததால் சிறுவனின் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், அவர்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.