என்னுடைய நண்பியின் தந்தை கால்களில் சப்பாத்துக்கூட இன்றி துணிகள் அடங்கிய ஒரு சிறிய பையுடன் கனடாவுக்கு வந்தார்.
அவர் நாஜி வதை முகாமில் பிறந்தவர்.
இரண்டாம் உலகப் போரின்போது அகதியாக கனடாவுக்குள் நுழைந்தார்.
அவருடைய குடும்பத்தினர் ரொறன்ரோவில் உள்ள அகதிகள் புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்றனர். அவர்களுக்கான உதவிகளை கனேடிய அரசாங்கம் வழங்கியது.
5 வயதான இருக்கும்போதே சாதாரண குழந்தைப் பருவத்தை கடுமையான சூழலில் எதிர்கொள்ள அவன் தலைப்பட்டான்.
அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் உள்ள சிறுவர் பாடசாலையில் அவனை இணைப்பதற்காக தாயார் அழைத்து வந்தார். அவன் வகுப்பறைக்குச் சென்றான். ஆனால் வகுப்பாசிரியர் அவனை தலைமையாசிரியரின் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டார். நாள் முழுவதும் அவன் அங்கேயே இருந்தான்.
ஏன்?
அவன் சப்பாத்து அணியவில்லை. அவனிடம் அது இல்லை. பள்ளிகளில் சப்பாத்து அணிவது கட்டாயம். அன்று பாடசாலை முடிந்ததும் அவனது வகுப்பாசிரியர் அவனை கடையொன்றுக்கு அழைத்துச் சென்று ஒரு சோடி சப்பாத்துக்கள் மற்றும் குளிரைத் தாங்கும் கம்பளி ஆடை ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.
இது நடந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன.
சிறுவனாக வந்த அவர் இன்று ரொறன்ரோவில் 3 மில்லியன் டொலர் பெறுமதியான சொந்த வீட்டில் வாழ்கிறார்.
இன்று அவர் 10 மில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனத்தின் உரிமையாளர்.
இன்னும் பிற சொத்துக்களும் அவரிடம் உள்ளன.
வெறும் கைகளுடன் காலில் சப்பாத்துக்கூட இன்றி கனடாவுக்கு வந்த எவரும் இன்று மோசமான நிலையில் இல்லை.
ஒரு ரீசேட் மற்றும் ஒரு சேடி நீளக் காற்சட்டைகளோடு வந்தவரின் இன்றைய சொத்து மதிப்பு 20 மில்லியன் டொலர்கள்.
இது எப்படி நடந்தது?
தனது பெற்றோர் கழுதைகளை வைத்துக்கொண்டு வேலை செய்ததை அவர் கண்டார். வதை முகாமில் வைத்து நாஜிக்கள் இவர்களைக் கொன்றுவிடவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் தையல்காரர்கள். தங்களது சீருடைகளைத் தைக்க நாஜிக்கள் இவர்களை பயன்படுத்தினர்.
போரின் பேரழிவில் இருந்து மீண்ட 40 ஆயிரம் பேரை கனடா ஏற்றுக்கொண்டது. இவர்களும் வந்தனர். அவர்கள் தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்தது.
உயர் கல்வியை முடித்ததும் எங்கும் அதிக வாய்ப்புக்கள் அவனுக்குக் கிடைத்தன. எந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை. சாண்ட்விச் கடையொன்றை தொடங்குவது அவனுக்கு நல்ல யோசனையாகத் தோன்றியது. அதையே செய்தான்.
பின்னர் சாண்ட்விச் கடையை விற்றுவிட்டு வீடு, நிலங்களை வாங்கி விற்கும் முகவராக மாறினான். அதில் அவனுக்கு அதிக வருமானம் வந்தது. தனது றியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு மில்லியன் பெறுமதிக்குரியதாக ஆனதும் அவன் அடுத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டான்.
றியஸ் எஸ்டேட் நிறுவனத்தை விற்றுவிட்டு குடியிருப்பு வீடுகளை வாங்கி மேம்படுத்தி விங்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கினான்.
ரொறன்ரோவின் முக்கிய பகுதிகளில் பாவனைக்குதவாத வீடுகளை வாங்கினான். அவற்றை திருத்தி சொகுசு பங்களாக்களாக அமைத்தான். அதிலும் இலாபம் கொட்டியது.
இன்று அவர் 20 மில்லியன் டொலர்களுக்கு அதிபதி.
ஒரு சோடி சப்பாத்துக்கு வழியற்றவனாக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று 20 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை அடைந்த கனேடிய பூர்வீக குடியைச் சேர்ந்த யாராவது உள்ளார்களா?
புலம்பெயர்ந்தவர்கள் வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டிருக்கும்போது கனேடிய பூர்வீக இளைஞர்கள் சுவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடுமையாக உழைக்காமல் தேவையான எல்லாமே தங்களின் கைகளில் வந்து சேரும் என்று கனேடிய பூர்வீக மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
கனடாவின் எதிர்காலத்தைப் பற்றி கனேடிய பூர்வீக குடிகளை விட அங்கு குடியேறியவர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என சி.பி.சி. செய்திச் சேவை கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
குடியேறியவர்கள் கனடா சரியான தளம் என்று நம்புகிறார்கள். அந்நாட்டு அரசை நம்புகிறார்கள். வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை.
நகைச்சுவை என்னவென்றால்! கடனாவில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. 90 வீதமான கனேடியர்கள் மத்திய தர வாழ்க்கையையே வாழ்கின்றனர். ஆனால் ஆனேக கனேடியர்கள் அதனைப் பற்றி கண்டுகொள்வதில்லை.
அவர்கள் சுற்றி இருந்துகொண்டு கனடாவின் வாழ்க்கை முறை கடுமையானது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
குடியேறிகள் பெரும்பாலானோர் ஏழைகளாவே கனடாவுக்கு வருகின்றனர். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால்! அவர்களில் பெரும்பாலானவர்கள் உழைத்து உயர்கிறார்கள்.
கனேடிய குடியேறிகள் கனேடிய பூர்வீக மக்களை விட அதிக வருவாய் ஈட்டுபவர்களாக உள்ளனர்.
அது எவ்வாறு சாத்தியமாகிறது?
புலம்பெயர்ந்து கனடா வந்தவர்கள் எந்த வேலையாயினும் செய்து உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கனேடியர்கள் ஆடை கலையாத இலகுவான வேலைகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் சிறுவயதில் இருந்து தயார்படுத்தப்படுகிறார்கள். பாடசாலைக் கல்வி முடித்து பின்னர் பல்கலைக்கழகம் சென்று ஆடை கலையாத வேலை தேடிக்கொள்கிறார்கள்.
ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் வேறு மார்க்கங்கள் ஊடாக அதிக வருவாய் ஈட்டுகின்றனர். ஏனெனில் தங்களது சொந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் வாய்ப்புக்கள் அதிகம் என அவர்கள் அறிந்துள்ளார்கள்.
வாய்ப்புக்களை புலம்பெயந்தோர் தேடுகிறார்கள். கிடைத்த வாய்ப்புக்களை மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொள்கிறர்கள்.
புலம்பெயர் கனேடியர்கள் பலர் சாதாரண வேலைகளின் ஆரம்பித்து பின்னர் அதனை ஒரு நிறுவன அளவுக்கு வளர்க்கிறார்கள். இதன் மூலம் நடுத்தர அல்லது மேல்தட்டு வாழ்க்கையை அவர்கள் அமைத்துக்கொள்கிறார்கள்.
இந்த உலகில் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் கனடா முதலிடத்தில் இருப்பதை எதுவும் தடுத்துவிட முடியாது
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உகந்த சிறந்த நாடுகள் குறித்த தரப்படுத்தல் பட்டில்களின் கனடாவும் உள்டங்குகிறது. கனேடியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தரப்படுத்தலில் இந்த நாடு முதலிடத்தைப் பிடிக்கும்.
இது கடுமையான வாழ்க்கை முறை என்று புகார் தெரிவித்துக்கொண்டிருப்பதை கனேடியர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.
இந்த உலகில் மிகச் சிறந்த நாடு ஒன்றில் நாங்கள் வாழ்கிறோம். இங்கு வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன. அதனை பற்றிக்கொள்ளுங்கள்.
உலகெங்கும் இருந்து கனேடிய மண்ணில் குழுமியிருப்போரால் இங்கு வறுமையை இல்லாதொழிக்க முடியும்.
நடுத்தர வாழ்க்கை முறை குறித்து கவலைப்படத் தேவையில்லை. கனடாவில் வாழக் கிடைத்ததே ஒரு மிகப் பெரிய பரிசுதான். இதனைக் கனேடியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சிக்கல் என்னவென்றால் கனடாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மூலையில் ஒரு அலுவலகம், ஆடம்பரமான கார், சிறப்பான வீடு அதனையடுத்து உடனடியாகவே ஒரு விடுமுறைக் கால வீடு வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
ஆனால் இந்தத் தேவைகளை தங்களது கடின உழைப்பின் மூலம் அடைய அவர்கள் தயாராக இல்லை.
உங்களுக்குக் கிடைக்கும் முதல் வேலையில் நீங்கள் சிறப்பாக முயன்றால் அதுவே உங்களை மத்திய தர வாழ்க்கை முறையில் இருந்து மேல் தட்டு வாழ்க்கை முறை நோக்கி நகர்த்தும். இதுவே வாழ்கைப் பாடம்.
ஆகவே, பெரிய வேலைக்காகக் காத்திராதீர்கள். கிடைக்கும் சிறய வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். அதுவே உங்களை உயர்த்தும்.
ஒரு கதவு மூடியிருக்கும்போது பல கதவுகள் திறந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
எந்தவொரு பணியிலும் உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். மிக விரைவில் உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும்.
எனது நண்பியின் தந்தை சான்ட்விச் கடையை ஆரம்பிக்கும்போது ஆடம்பர வீடு கட்டுமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் எண்ணம் அவரிடம் இருக்கவில்லை.
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவேன் என அவருக்குத் தெரியாது.
நான் ஒரு முழு நேர எழுத்தாளர். 10 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பணியில் இருப்பது கடுமையான ஒன்று என எண்ணினேன். எழுதுவதை வெறுத்தேன்.
ஆனால் கடந்த ஏழு வருடங்களாக நான் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நிறுவனத்துக்காக அதிக முன்மொழிவுகளை எழுதுவதில் எனது அதிகளவு நேரத்தைச் செலவிட்டேன். இப்போது எழுதுவது எனக்கு இலகுவாகத் தெரிகிறது.
'வெற்றி தற்செயலானது அல்ல. இது கடின உழைப்பு, விடாமுயற்சி, தேடல், அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றின் கலவை'
புலம்பெயர்ந்தவனைப் போல் உழையுங்கள்..
மூலம் - கிறிஸ்டோபர் ஓல்ட்கார்ன் (கனேடிய எழுத்தாளர்) தமிழில் - மதிமுகன் (அருவி இணையத்துக்காக)
Category: கட்டுரைகள், பகுப்பு
Tags: