காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய நிர்வாகத்துட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா இரத்துச் செய்துள்ளது. கடந்த ஒகஸ்ட் 5ஆம் திகதி இந்த அறிவிப்பு வெளியானது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளிட்டது.
இந்தியாவின் அறிவிப்புக்கு எதிராக பாகிஸ்தான் போக்கொடி தூக்கியுள்ளது. இந்தியாவுடனான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதுவரையும் அந்நாடு திரும்ப அழைத்துவிட்டது.
இந்நிலையில் காஷ்மீர் சர்ச்சை குறித்து முறையிட சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கும் ஜி-7 நாடுகளின் மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக வரும் இந்தியப் பிரதமர் மோடியுடன் இந்த விவகாரம் குறித்து பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனையை இரு நாடுகளும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் இதுகுறித்து நேற்று செவ்வாய்க்கிழமை அவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அத்துடன் இவ்வாரம் ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் வரும் இந்தியப் பிரதமரை பாரிஸில் சந்திக்கவுள்ள பிரான்ஸ் அரச தலைவர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.