சீனாவில் இடம்பெற்றுவரும் உலக 'ரோபோ' மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மனித மற்றும் விலங்கு ரோபோக்கள் பபார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துவருகின்றன.
சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக 'ரோபோ' மாநாடு நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக 'ரோபோ' மாநாடு பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.
'ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு' என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில், மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டொக்டர் ரோபோ, ஆபத்து காலங்களில் உதவும் தன்மை கொண்ட நாய் ரோபோ, பியானோ வாசிக்கும் ரோபோ, பார்களில் மது வினியோகிக்கும் ரோபோ, குழந்தைகளிடம் தோழமை பாராட்டி விளையாடும் ரோபோ, அரை கிலோ எடையுடன் 20 நிமிடங்கள் பறக்கக் கூடிய பறவை ரோபோ, நீரில் நீந்தும் மீன் ரோபோ உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.