அவுஸ்ரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக அவுஸ்ரேலிய தூதரகம் எதிரே இலங்கையர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மர், இலங்கை உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,000 அகதிகள் இந்தோனேசிய முகாம்களிலும் வீதிகளிலும் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்ரேலியாவில் குடியேற காத்திருக்கக்கூடிய அகதிகள். ஆனால், கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் அகதிகள் விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை அவுஸ்ரேலிய அரசு பின்பற்றி வருகிறது.
இந்தச் சூழலில், மனிதாபிமானமற்ற விதிகளை அவுஸ்ரேலிய அரசு திரும்ப பெற வேண்டும் என அவுஸ்ரேலிய அதிகாரிகளிடம் சமர்பித்த கடிதத்தில் அகதிகள் கோரியுள்ளனர். 'நாங்கள் இந்தோனேசியாவில் எந்த அடிப்படை உரிமையுமின்றி கிடக்கிறோம். மன ரீதியாகவும் அகதிகள் பாதிக்கபப்ட்டிருக்கின்றனர்’ என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்ரேலிய அரசு, படகில் வர முயற்சிக்கும் அகதிகளை முழுமையாக நிராகரித்து வருகின்றது.
அதேசமயம், இந்தோனேசியாவில் 2014 ஜூலை முதலாம் திகதிக்கு முன்னதாக ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகள் மட்டுமே மனிதாபிமான திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவார்கள் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.