இலங்கை வழியாக தமிழகத்திற்குள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள்; ஊடுருவியுள்ளனர் என இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து, தமிழக பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறன. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக்களைத் தீவிரமாக்குமாறு தமிழக தலைமைப் பொலிஸ் அதிகாரி மாவட்ட தலைமைப் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து தமிழகத்தின் கரையோரங்கள் ஏற்கனவே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனை மீறி தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முருகல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்த இந்த எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.