Thursday 28th of March 2024 01:17:24 PM GMT

LANGUAGE - TAMIL
“ஒற்றை ஆட்சியும் இலங்கையின் நீதியும்“
“ஒற்றை ஆட்சியும் இலங்கையின் நீதியும்“ - பி.மாணிக்கவாசகம்

“ஒற்றை ஆட்சியும் இலங்கையின் நீதியும்“ - பி.மாணிக்கவாசகம்


இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் அடாவடித்தனங்களில் ஈடுபடுகின்றவர்களின் காலடியில் சுருண்டு கிடக்கின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும். ஜனநாயக ஆட்சியை நேர்த்தியாக முன்னெடுக்க வேண்டும் என்ற நல்லாட்சிக்கான சிந்தனையும் முடங்கிக் கிடக்கின்றது.

சிங்களத் தேசியத்தை வளர்ந்தோங்கச் செய்ய வேண்டும் என்பதிலேயே ஆட்சியாளர்களின் கவனம் குவிந்திருக்கின்றது. இன ரீதியான, பௌத்த மத ரீதியான அரசியல் உளவியலுக்குள்; அவர்கள் சிக்கி இருக்கின்றார்கள்.

சிங்களவர்களும் சிங்கள மொழியும் பௌத்த மதமும் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய ஜனநாயக தத்துவம். இதுதான் அவர்களுடைய சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அடிப்படை நிலைப்பாடு.

இதனால் சிங்களவர்கள் மட்டுமே மேலாண்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். சிங்கள மொழிமயமானதாகவே அனைத்து நடவடிக்கைகளும் அமைந்திருக்க வேண்டும். சிங்களவர்களையும் சிங்கள மொழியையும் கட்டமைப்பாகக் கொண்ட ஆட்சியில் பௌத்த மதம் மட்டுமே இழையோடி முழுமை பெற்றிருக்க வேண்டும் - இதுவே அவர்களின் அரசியல் அபிலாசை.

இதுதான் அவர்களின் ஒற்றையாட்சி குறித்த அரசியல் ரீதியான புரிந்துணர்வு. இதுதான் ஜனநாயக ஆட்சி என்பதற்கான அவர்களின் வரைவிலக்கணம். இதுவே அவர்கள் கருதுகின்ற நல்லாட்சி என்பதன் உட்பொருள்.

உண்மையான ஜனநாயகம் தனியொரு இனத்தையும், தனியே ஒரு மொழியையும், தனித்துவமாக ஒரு மதத்தையும் மேலாண்மையாகக் கொண்டிருப்பதில்லை. அது பன்முககத்தன்மை உடையது. பல இனங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும். பல மொழிகளுக்கும் அரசியல் அந்தஸ்து கொண்டிருக்க வேண்டும். சமூக, அரசியல், பொருளாதார உரிமை சார்ந்த நிலைமைகளிலும், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகளிலும் இந்த பன்முகத் தன்மை பரவி இருக்க வேண்டும். என்பதுதான் உண்மையான ஜனநாயகத்தின் தன்மை. ஓற்றையாட்சி முறையிலும் இந்த ஜனநாயகத்தின் தன்மைகளையும் பண்புகளையும் பேணி ஒழுக முடியும். உண்மையான நல்லாட்சி நடத்த முடியும்.

ஆனால் ஒற்றையாட்சி என்ற கட்டமைப்புக்குள் எல்லாமே சிங்கள மயப்பட்டிருக்க வேண்டும். எல்லாமே சிங்கள பௌத்த மயமாக இருக்க வேண்டும் என்பதையே அரசியல் உயிர் மூச்சாகக் கொண்டு பேரின அரசியல்வாதிகள் பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களை வழிநடத்துகின்றார்கள். ஆட்சி புரிந்து வருகின்றார்கள்.

நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் உருவாக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறைமையில் பல்லினத் தன்மை பேணப்பட்டிருந்தது. பல்வேறு மொழி பேசுபவர்களும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் தங்களின் தனித்துவத்தைப் பேணி வாழ்வதற்குரிய வழி வகைகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் ஒற்றையாட்சி என்ற அரசியல் வரைவிலக்கணத்திற்குள் சிங்களம் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற பேரினவாத சிங்கள பௌத்த தேசிய சிந்தனை இந்த ஜனநாயகத் தன்மைக்குள் ஊடுருவி பேரினவாதத்தையும் பேரின சர்வாதிகாரத்தையும் நிலைநாட்டி வருகின்றது. இதைத்தான் நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் நீதிமன்ற உத்தரவை மீறி பலாத்காரமாக மேதாலங்காதேரருடைய சடலத்தை எரித்த சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

அங்கு மதச்சுதந்திரம் பேணப்படவில்லை. பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பையே நிதர்சனமாகக் காண முடிந்தது.

நீராவியடி பிள்ளையார் ஆலயம் வரலாற்று ரீதியாகப் பழைமை வாய்ந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமடைந்தபோது முல்லைத்தீவு மாவட்டத்தை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய இராணுவத்தினர் செம்மலை பகுதியில் இந்த ஆலயத்தை உள்ளடக்கி தமது முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.

இராணுவ முகாம் வளவுக்குள் அமைந்திருந்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் மேதாலங்காதேரரை அழைத்து வந்து பௌத்த வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு அந்த ஆலய வளவுக்குள் அத்துமீறி பிரவேசித்து சிறிய வசிப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்த கொலம்பே மேதாலங்காதேரர் அங்கு புத்தர் சிலையொன்றை முதலில் நிறுவினார். அந்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அந்தத் திணைக்களம் முதலில் உரிமை கோரியது.

வரலாற்று ரீதியாகப் பழைமை வாய்ந்த நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியை வரலாற்று ரீpதியான பழைமை வாய்ந்த பௌத்த இடம் என சொந்தம் கொண்டாடிய மேதாலங்காதேரர் அங்கு 'புராதன குருகந்த ரஜமகாவிகார' என்ற பெயரில் பௌத்த விகாரையைக் கட்டி எழுப்பினார். முழுக்க முழுக்க இராணுவத்தினதும், பொலிசாரினதும் பாதுகாப்புடன் அவர் இந்தப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.

பாரம்பரிய இந்து ஆலயமாகிய நீராவியடி பிள்ளையார் கோவில் வளவில் இடம்பெற்ற இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பிள்ளையார் கோவில் பரிபாலன சபையினரும், அந்தப் பிரதேசத்து மக்களும் தமிழர் மரபுரிமைப் பேரவை உள்ளிட்ட பொது அமைப்புக்களும் எதிர்த்த போதிலும், அந்த எதிர்ப்புக்கள் உரியவர்களினால் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அதனால் பாதிக்கப்பட்ட தரப்பினராக அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தில் முன்னிலையாகிய தொல்பொருள் திணைக்களத்தினர் நீராவியடி பிள்ளையார் ஆலயமே பழைமை வாய்ந்தது என்றும் அங்கு பௌத்த மதத்திற்கான வரலாற்று அடையாளங்கள் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் அங்கு பௌத்த வழிபாடு ஏற்கனவே இடம்பெற்று வந்ததனால், இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு வழிபாடுகளில் ஈடுபடலாம். ஆனால் புதிதாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் உள்ளுராட்சி சபைகளின் உரிய சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு அதற்கான உரிமத்தைப் பெற்றுச் செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த மேதாலங்காதேரர் தரப்பினர் வவுனியா மேல் நீதிமன்றத்தை நாடி பௌத்த விகாரையின் இருப்புக்காகவும், அதன் வரலாற்று ரீதியான உரித்துக்காகவும் உரிமையை நிலைநாட்டி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்தப் பின்னணியில்தான் கொலம்பே மேதாலங்காதேரர் புற்று நோய்க்கு ஆளாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார்.

பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது சிங்களப் பொதுமக்களோ இல்லாத முல்லைத்தீவில் விகாரை அமைத்து பௌத்தத்தை நிலைநிறுத்தியதன் மூலம் சாதனை புரிந்ததாக பௌத்த தீவிரவாதிகளினால் கருதப்பட்ட மேதாலங்காதேரருடைய பூதவுடலை அவரால் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள பகுதியிலேயே தகனம் செய்ய வேண்டும் என்று பௌத்த சங்கத்தினர் தீர்மானித்தனர். அதன்படி அவருடைய சடலம் அங்கு கொண்டு செல்லப்பட்டது.

நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதிக்குள் அவருடைய இறுதிக்கிரியைகளைச் செய்வதற்கு பௌத்த பிக்குகள் முயற்சிப்பதை அறிந்த கோவில் பரிபாலன சபையினரும் தமிழர் மரபுரிமைப் பேரவையினர் உள்ளிட்ட பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தை நாடி, இந்த நடவடிக்கை இந்து மதப் பாரம்பரியத்திற்கும் அதன் புனிதத்தன்மைக்கும் விரோதமானது என எடுத்துக்கூறி தடையுத்தரவு கோரினர்.

இறந்துபோன பிக்குவினுடைய இறுதிக்கிரியைகளைச் செய்யக் கூடாது என்று தாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் அதனைச் செய்யக்கூடாது என்பதே தங்களுடைய கோரிக்கை என்பதை நீதிமன்றத்தில் அவர்கள் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இதனையடுத்து, நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதிக்கு வெளியில் கடற்படை முகாம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் பிக்குவினுடைய உடலைத் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனம் செய்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளராகிய ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும், அவர்களுக்கு ஆதரவாக அங்கு கூடியிருந்த சிங்கள பௌத்தர்களும் சிஙகள பௌத்த சங்கத்தின் தீர்மானத்திற்கமைய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குருகந்த ரஜமகா விகாரை பகுதியில் - நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுப் பகுதியில் நீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனம் செய்து மேதாலங்காதேரர் இறுதிக்கிரியைகளைச் செய்ய முற்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவைக் கையில் கொண்டு சென்று அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கோவில் குருக்கள், அவருடன் இருந்த பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணி சுகாஸ் ஆகியோரை பிக்குகள் தலைமையிலானவர்கள் தாக்கினர். தாக்கப்பட்டவர்களில் சிலர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் அந்த இடத்தில் மோதல் நிலைமைகள் தீவிரமடைவதையும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் கருத்திற்கொண்டு நீராவியடி பிள்ளையார் கோவில் பரிபாலன சபை தரப்பினர் பின்வாங்கி இருந்தனர். அவர்களின் நியாயமான எதிர்ப்பையும் நீதிமன்றத்தின் உத்தரவையும் புறக்கணித்த பௌத்த பிக்குகளும் மற்றவர்களும் தேரருடைய சடலத்தை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்த குளத்தருகில் கரையில் வைத்து எரித்தனர்.

இந்து முறைப்படி தீர்த்தமாடுதல் என்பது புனிதமான ஒரு சமயக் கிரியையாகும். அந்தத் தீர்த்தக்கரையில் இறந்த ஒருவரின் சடலத்தை எரித்து ஆலயத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்துள்ளனர். அங்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி, சண்டித்தனத்தின் மூலம் இந்து மதத்தின் பாரம்பரியம் மீறப்பட்டுள்ளது. இந்தச்செயல் இந்து மதத்தைக் கேவலப்படுத்தி, இந்துக்களை அவமானப்படுத்தி உள்ளது. அவர்கள் மனமுடைந்து போயிருக்கின்றார்கள்.

நிதிமன்றத்திற்கு மதிப்பளித்து, அதன் உத்தரவைக் கடைப்பிடிக்காமல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாகத் திரண்டிருந்த சிங்கள பௌத்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காகவே அங்கு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். கலகம் அடக்கும் படையினரும் அவர்களுக்குக் கவசமாக அணிவகுத்து நின்றிருந்தனர்.

இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியின் கரையில் பௌத்த பிக்குவின் சடலத்தை எரித்தவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு பொலிசார் முற்படவில்லை. முயற்சிக்கவில்லை. மாறாக எதிர்ப்பு தெரிவித்த இந்து மத குருக்களையும் அவர்களுடன் இருந்தவர்களையும் சட்டத்தரணிகளையும் சமாதானப்படுத்தி சடலம் எரிக்கப்படுவதை நியாயப்படுத்துவதிலேயே பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு ஏற்பட்டிருந்த வாய்த்தர்க்கத்தின்போது பௌத்த பிக்குகளின் நடவடிக்கையை சாதாரண நடவடி;ககையாகக் கருதி அமைதி காக்குமாறு அந்தப் பிரதேசத்துப் பொதுமக்களிடம் வலியுறுத்துவதிலேயே பொலிசார் தீவிரமாக இருந்தனர். வாய்த்தர்க்த்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் இந்து மத குருக்களையும் அவர்களுடன் பொதுமக்களையும் சட்டத்தரணியையும் தாக்கியபோது அதனைத்; தடுப்பதற்கோ அல்லது வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டிப்பதற்கோ பொலிசார் முயற்சிக்கவி;ல்லை.

இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் ஒரு பகுதியினர் சண்;டித்தனத்தைப் பயன்படுத்தி அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டபோது, அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தமது தலையாய கடமையையும் பொறுப்பையும் பொலிசார் நிறைவேற்ற வில்லை. மாறாக கலகம் விளைவித்தவர்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்குச் சார்பாக அந்த இடத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பாதிக்கப்பட்ட தமிழ்த்தரப்பினரை சமாளிப்பதிலும் அவர்களுக்கு விரோதமாகவுமே பொலிசார் செயற்பட்டிருந்தனர்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது பொலிசாரின் கடமை. சட்டம் ஒழுங்குடன் நீதியை நிலைநாட்ட வேண்டியதும் அவர்களின் பொறுப்பு. ஆனால் சீர்குலைகின்ற இடங்களில் சட்டமும் ஒழுங்கும் சீராக்கப்படுவதில்லை. பொது அமைதியைக் குலைப்பவர்களுக்கு அத்தகைய இடங்களில் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது.

இதுதான் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் நடைபெற்றது. அந்த ஆலயத்தின் தீர்த்தக்கரையில் இந்து மதத்தின் புனிதத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பௌத்த பிக்குவாகிய கொலம்பே மேதாலங்காதேரரின் சடலம் எரிக்கப்பட்டது. அதற்கு பொலிசார் உறுதுணையாக இருந்து செயற்பட்டிருந்தனர். இதன் மூலம் தங்களால் பேணி பாதுகாக்கப்பட வேண்டிய சட்டமும் ஒழுங்கும் அடாவடித்தனக்காரர்களுடைய காலடியில் சுருண்டு கிடக்கின்றன என்ற உண்மையான நிலைமையை பொலிசார் வெளிப்படுத்தி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் பௌத்த மத்திற்கு முதலிடம் வழங்கியுள்ள போதிலும் பிற மதங்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. அந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் அவற்றைப் பேணி நடப்பதற்கு முடியும் என்ற உரிமையை வழங்கியுள்ள அரசியலமைப்புச் சட்டமும் இந்தச் சம்பவத்தின் மூலம் மீறப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்களின் அடிப்படை மத உரிமை கலகமடக்கும் பொலிசாரின் துணையுடன் இங்கு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியில் இறந்த பிக்குவின் உடல் எரிக்கப்படக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறியதனால் நீதித்துறை அவமதிக்கப்பட்டுள்ளது.

பிற மதங்களையும் பிற மதத்தவர்களையும் மதித்து அவர்களுடைய உரிமைகளை ஏற்றுச் செயற்பட வேண்டும் என்ற ஜனநாயகத் தன்மையை இங்கு அடாவடித்தனமாகச் செயற்பட்டவர்கள் தங்கள் காலடியில் போட்டு மிதித்துள்ளார்கள். இதனால் சிறுபான்மை மதத்தவராகிய இந்துக்களின் ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் கோவில் தீர்த்தக்கரையில் வளவில் பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகமும், சிறுபான்மை மதங்களினதும், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை உரிமைகளும் கேள்விக்கு உள்ளாகி இருக்கி;னறன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நீதி நிலைநிறுத்தப்படுமா? சிறுபான்மை இன மக்களின் அடிப்படைஉரிமைகள் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநிறுத்தப்படுமா? இவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவது யார்? - இது போன்ற கேள்விகளை நீராவியடி பிள்ளையார் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் உடல் எரிக்கப்பட்;ட சம்பவம் எழுப்பியிருக்கின்றது.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE