வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக சிறுவர் தின நாளான இன்று இறுதிப்போரின் போது போராளிகள் சரணடையும் போது அவர்களுடன் சென்ற பிள்ளைகள் எங்கே? அவர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் முன்பாகத் திரண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் மக்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக விளம்பரப் பலகை மீது சாணம் வீசியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் பிரதான வீதியிலும், மட்டக்களப்பில் காந்திபூங்கா முன்றலிலும், திருகோணமலையில் பிரதேச செயலகம் முன்பாகவும் முல்லைத்தீவில் மாவட்ட செயலகம் முன்பாகவும் மன்னாரில் மாவட்ட செயலகம் முன்பாகவும் கிளிநொச்சியில் பசுமை பூங்கா முன்பாகவும் வவுனியாவில் பழைய பேருந்து நிலையம் முன்பாகவும், யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
காணாமல் ஆக்கப்பட்ட சிறார்களின் படங்களைத் தாங்கியவாறுபோரட்டங்களில் ஈடுபட்டவர்கள் தமது குழந்தைகளுக்கு நீதிவேண்டும் எனக் கோரிக்கைமுன்வைத்தனர்.