Thursday 28th of March 2024 09:37:14 AM GMT

LANGUAGE - TAMIL
“தமிழரின் வாக்கு யாருக்கு?”
“தமிழரின் வாக்கு யாருக்கு?” - பி.மாணிக்கவாசகம்

“தமிழரின் வாக்கு யாருக்கு?” - பி.மாணிக்கவாசகம்


ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது, எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தமிழர் தரப்பில் ஒரு குழப்பகரமான நிலைமையே காணப்படுகின்றது.

தேர்தல் களத்தில் முதன்மை நிலையில் காணப்படுகின்ற வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள், அவர்களுடைய அரசியல் நலன்கள் குறித்து சாதகமான சமிக்ஞைகளைக் காட்டத் தவறி இருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்களை வசீகரித்து, அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடத் தவறவில்லை.

தமிழ் மக்கள் அன்றாடப் பிரச்சினைகளுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற இரு முனைகளில் இந்தத் தேர்தலில் தங்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழ் மக்களும் இந்த நாட்டின் வரலாற்று ரீதியான குடிமக்கள். அவர்கள் சிறுபான்மையாக இருக்கின்றார்கள் என்பது மட்டுமே வித்தியாசம். சிறுபான்மை சமூகம் என்பதற்காக அவர்கள் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுக்கு எந்தவகையிலும் அரசியல் அந்தஸ்தில் குறைந்தவர்கள் அல்ல. ஆனால், முக்கால்வாசிக்கும் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ள பெரும்பான்மை இன மக்களுக்கே சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் முதன்மை நிலைமை என்ற ரீதியிலான ஆட்சி நிர்வாகப் போக்கு ஒன்று நாட்டில் நிலவுகின்றது.

நாட்டின் அதி உயர் அரசியல் அதிகார பலம் கொண்ட ஜனாதிபதியாக சிங்களக் குடிமகன் ஒருவரே வர முடியும். அதுவும் அவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத நியதியும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பில் இடம்பெறாத போதிலும் நடைமுறையில் இதுவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உப ஜனாதிபதி முறைமை இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ளடக்கப்படவில்லை. சிறுபான்மை இன மக்களுடைய தலைவர் ஒருவர் ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறத் தக்க வகையில் இந்த அம்சம் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை.

ஒற்றையாட்சியை முழுமையாகக் கருத்திற் கொண்டு பெரும்பான்மை இன மக்களின் நலன்களுக்கே அரசியலமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஒற்றையாட்சி என்பது சிறுபான்மை இன மக்களின் நலன்களைப் புறந்தள்ளுகின்ற ஓர் அரசியல் அம்சமாகும்.

இதன் அடிப்படையில், தமிழ் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய தாயகப் பிரதேசங்களைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து அந்தப் பகுதிகளின் இனப்பரம்பலைத் தலைகீழாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரச நிர்வாக இயந்திரங்கள் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றன.

நாட்டின் விவசாயத் துறையை முன்னேற்றுவதற்கென்றே மகாவலி அபிவிருத்தி அதிகார உருவாக்கப்பட்டது. நாட்டின் மிக நீளமான ஆறாகிய மகாவலி கங்கையின் நீர் வீணாகக் கடலில் சங்கமமாவதைத் தடுத்து, திசை திருப்பி விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை அது முன்னெடுத்து வருகின்றது.

விவசாயத் துறையை வளப்படுத்துவதற்கான வேலைத் திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்ட போதிலும், திசை திருப்பப்பட்ட மகாவலி நீர் பாய்கின்ற கால்வாய்க் கரையோரங்களில் சிங்களக் குடும்பங்களே குடியேற்றப்பட்டிருக்கின்றன. மகாகவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் சிங்கள மக்கள் மட்டுமே பெருமளவில் நன்மை அடைந்துள்ளனர்.

அதேவேளை, தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இவ்வாறு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் கிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பல் தலைகீழ் மாற்றத்திற்கு உள்ளாகி சிங்களவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அந்த மாகாணத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராவதற்கு வழிவகுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் வடமாகாணத்திற்கும் விவசாயத் தேவைக்காக மகாவலி நீரைக் கொண்டு வருகின்றோம் என்ற போர்வையில் மிக வேகமாக சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அனுராதபுரம், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் மும்முனை எல்லைப் பிரதேசத்தை இலக்கு வைத்து வெலிஓயா என்ற மணலாறு பிரதேசத்தை முழு அளவிலான சிங்கள மக்கள் குடியிருக்கும் பிரதேசமாக அரசாங்கங்கள் மாற்றியுள்ளன.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தின் துணையுடன் அடாத்தாகக் கைப்பற்றி குடியேறியுள்ள சிங்களக் குடும்பங்களும், தமிழ் மக்களின் வயல்காணிகளில் இராணுவத்தின் பாதுகாப்புடன் விவசாயத்தை மேற்கொண்ட சிங்களக் குடும்பங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறுவதற்காகத் திரும்பி வந்த தமிழ்க் குடும்பங்கள் தமது காணிகளில் சிங்கள மக்கள் குடியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். நியாயமாகவும் மனிதாபிமான ரீதியிலும் அந்தக் காணிகளை சிங்கள மக்கள் விட்டுக்கொடுத்து, அங்கிருந்து வெளியேறி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு வழியேற்படுத்தி இருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.

தமிழ் மக்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளில் அடாத்தாகக் குடியேறிய சிங்களக் குடும்பங்களும், அடாத்தாக தமிழ் மக்களின் வயற்காணிகளில் விவசாயம் செய்த சிங்களவர்களும் அங்கிருந்து வெளியேற மறுத்து, இராணுவத்தின் பாதுகாப்புடன் தொடர்ந்து இருக்கின்றார்கள். இதனால் இடம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும், சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாமல் இரவல் காணிகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்க்கை நடத்த வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு, மன்னர் மாவட்டம் முள்ளிக்குளம் ஆகிய இடங்களில் படையினர் பொதுமக்களின் கிராமங்களை கையகப்படுத்தி நிலைகொண்டுள்ளார்கள். இந்தப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விவசாயச் செய்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தக் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தும்கூட அது நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. இதனால் முள்ளிக்குளம் மக்கள் காடடர்ந்த பகுதிகளில் குடியிருக்க நேர்ந்துள்ளது.

இது மட்டுமா? வுனபரிபாலன திணைக்களம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் காஞ்சூரமோட்டை போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்து பின்னர் தாயகம் திரும்பியுள்ள குடும்பங்கள் மீள்குடியேறுவதற்குத் தடையாகச் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்கள் குடியிருந்த காணிகளுக்கு அரச அதிகார உரிமை கொண்டுள்ள போதிலும், அந்தக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அந்தத் திணைக்கள அதிகாரிகள் சொந்தம் கொண்டாடுகின்றார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தாயகம் திரும்பியுள்ள போதிலும் நிம்மதியாக சொந்தக் காணிகளில் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதவர்களாக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறம் பௌத்த பிக்குகள் இராணுவத்தின் பாதுகாப்புடன் இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் பௌத்த விகாரைகள் வரலாற்று காலம் தொடக்கம் இருந்து வந்ததாகக் கூறி அவற்றை ஆக்கிரமித்து புத்தர் சிலைகளை வைப்பதிலும் பௌத்த விகாரைகளை நிறுவுவதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த பௌத்த மத ஆக்கிரமிப்புக்கு தொல்பொருள் திணைக்களத்தினர் உறுதுணையாக இருந்து அந்தப் பிரதேசங்கள் புராதன பௌத்த வழிபாட்டுத் தலங்களாகத் திகழ்ந்தவை என்று சான்றிதழ் வழங்கி பௌத்த பிக்குகளை ஊக்குப்படுத்தி வருகின்றார்கள். உண்மையான இந்து சமய வரலாற்றைச் சுட்டிக்காட்டி வாதிட்டாலும், சட்டத்தின் துணைகொண்டு அவற்றை முறியடித்து பௌத்த மத ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள். இதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களமும் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பூர்வீக விவசாய நிலங்களையும் குடியிருப்புப் பிரதேசங்களையும் கபளீகரம் செய்வதில் துணிந்து இறங்கியிருக்கின்றது.

தமிழ் மக்களுடைய தாயகப் பிரதேசமாகிய வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பாக வடக்கில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு நடைமுறைகளிலான நில ஆக்கிரமிப்புச் செயற்பாடானது தமிழ் மக்கள் மீதான மறைமுக இன அழிப்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மென்முறையிலான இந்த நடவடிக்கை ஆயுதமோதல்கள் மௌனிக்கப்பட்ட பின்னணியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இன அழிப்புக்கான ஒரு யுத்தமாகவே தொடர்கி;ன்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் கவனம் செலுத்துவார்கள் என்றோ அல்லது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளைத் தமது தேர்தல் காலக் கொள்கையாகக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பது இன்றைய அரசியல் யதார்த்த சூழலில் அறிவிலித்தனமாகவே இருக்கும்.

அதிகாரப் போட்டிக்காக சிங்கள அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்களுக்குள் எவ்வளவுதான் முட்டி மோதிக்கொண்டாலும், தமிழ் ம்ககளுடைய விவகாரங்கள், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் என்று வரும்போது தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் ஒன்றிணைந்து கொள்வார்கள். இதனை அவர்கள் ஒரு தேசிய கொள்கையாகவே பின்பற்றி வருகின்றார்கள்.

இத்தகைய கொள்கை நிலைப்பாட்டின் விளைவாகவே இரண்டு பிரதான பேரின அரசியல் கட்சிகளும் ஒன்று மாறி ஒன்று ஆட்சிபீடத்தைக் கைப்பற்றும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவதை மற்றைய எட்சியாகிய எதிர்த்தரப்பினர் மூர்க்கத்தனமாக அதனை எதிர்ப்பதையே ஒரு வாடிக்கையான அரசியலாகக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்கள் சார்பில் மென்போக்கைக் கடைப்பிடித்தால் அதைக்கூட அவர்களால் சீரணிக்க முடியாது. சகித்தக் கொள்ள முடியாது. அந்த மென்மையான போக்கிற்கு எதிராக அரசியல் ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.

இத்தகைய பின்புல்த்தில்தான் பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மூன்று பிரதான கட்சிகளும் தமிழர் தரப்பு அரசியல் தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் தமிழர் தரப்பினருடைய அரசியல் திர்வுக்கான எதிர்பார்ப்பையும் கவனத்திற் கொள்ளாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

சிறுபான்மை இன மக்களுக்குச் சார்பான ஒரு கொள்கை நிலைப்பாட்டை ஒரு வேட்பாளரோ அல்லது அவர் சார்ந்ததோர் அரசியல் கட்சியோ எடுக்குமானால், அந்த நடவடிக்கையின் மூலம் எதிர்த்தரப்பினர் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்றதோர் அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்துவிடுவார்கள்.

இதனால் அத்தகைய நிலைமைக்குத் தங்களை ஆளாக்கி சிங்கள மக்களின் ஆதரவை இழப்பதற்கு பிரதான வேட்பாளர்கள் எவரும் துணியமாட்டார்கள். இதுவே அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், அரசியல் நலன்கள் குறித்து வெளிப்படையாகக் கவமன் செலுத்தாமைக்கான பிரதான காரணமாகும்.

வெளிப்படையாக அவர்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குகின்றனர் என்றால் மறைமுகமாக தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தமல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நாடெங்கிலும் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களைப் பரந்து வாழச் செய்திருப்பதனால் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேச மக்களினதும் வாக்குகளைப் பெற்றே வெற்றியீட்டி இருக்கின்றார்கள் என்ற தோற்றப்பாட்டை வெளியுலகத்திற்குக்; காட்ட முடியும்.

இதனால்தான் தமிழ் மக்கள் தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கே வாக்களித்து பேரின வேட்பாளர்கள் மீதும், பேரின அரசியல் கட்சிகளினதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிடக் கூடும் என்பது குறித்து அரசியல் ரீதியாக அச்சமில்லாத நிலையில் உள்ளனர்.

தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாகிய வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களினால் அந்த மாகாணங்களின் தனித்துவமான இனப்பரம்பல் நிலைமையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அவர்களின் தேர்தல் கால அரசியலுக்கும் இனவாத அரசியலுக்கும் இலாபம் தரத்தக்க ஒரு பிரதான அம்சமாகும்.

எனவே, இந்த நாட்டின் ஜனாதிபதியை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேரடியாக வாக்களித்துத் தெரிவு செய்த போதிலும், ஜனாதிபதியாக வருபவர் சிங்கள மக்களின் தலைவராகவே செயற்பட்டு வந்துள்ளார். அனைத்து மக்களினதும் ஜனாதிபதி என்ற பொதுத் தன்மை நிலையைக் கொண்டவராக அவர் ஒருபோதும் செயற்பட்டதில்லை.

இத்தகைய அரசியல் பின்புலத்தில்தான் தமிழ் மக்கள் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலில் எவரையும் நம்பிக்கைக்கு உரியவராகக் கருதி மன நிறைவோடு வாக்களிக்க முடியாத நிலைமைக்கே தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் நலன் சார்ந்த தேர்தல் கால வாக்குறுதிகளும் இல்லை. உறுதிமொழிகளும் இல்லை. அத்தகைய சாதகமான உறுதிப்பாட்டுடன் கூடிய நிலைமைக் கொண்டிருப்பதாக வேட்பாளர்கள் தங்களை வெளிப்படுத்தவும் இல்லை. மறுபுறத்தில் தேர்தலின்போது அளிக்கின்ற வாக்குறுதிகளை பேரின அரசியல் தலைவர்கள் நிறைவேற்றியதாகவும வரலாறில்லை.

இனிக்க இனிக்கப் பேசுவார்கள். நம்பத் தகுந்த வகையில் உறுதியளிப்பார்கள். ஆனால் பதவிக்கு வந்தபின்னர் அவற்றைப் பற்றி கவனத்தில் கொள்ளவே மாட்டார்கள். இத்தகைய வரலாற்று அனுபவத்தைக் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்ட வேட்பளார்கள் களமிறங்கியுள்ள இந்த ஜனாதிபதி தேர்தலில் மனமுவந்து எவரையுமே ஆதரிக்க முடியாத நிலைமையிலேயே மக்கள் இருக்கின்றார்கள்.

யாருக்கு வாக்களித்தாலும் அதனால் நல்ல பலன்கள் விளையப் போவதில்லை. வாக்களிக்காமல் தேர்தலைப் புறந்தள்ளினாலும் பேரின அரசியல்வாதி ஒருவர் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது. வென்று வருகின்றவரைத் தங்களுக்குச் சார்பாகச் செயற்பட வைக்கவும் தமிழ் மக்களால் முடியாது.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE