ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல், காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 16 பேர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் தொகை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புயல், மழையின் பின்னர் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியும், ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் உயிரிழந்தனர்.
புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் 73 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 376,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஹெலிகப்டர்கள் மற்றும் படகுகளுடன் 27 ஆயிரம் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜப்பானில் உள்ள 14 ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளதால் இயல்புநிலை திரும்க இன்னும் பல நாட்கள் எழுக்கலாம் என கருதப்படுகிறது.
புகுஷிமா நகரத்தின் ஒரு பகுதியில் வீடுகளை முற்றாக வெள்ளம் மூடியுள்ளது. சில வீடுகளின் கூரைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன.
டோக்கியோவின் தமா நதியும் பெருக்கெடுத்ததால் அங்கும் வீடுகள் மற்றும் கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, பல பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானில் கிழக்கு கடற்கரையை ஹகிபிஸ் புயல் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் தாக்கியது. கடந்த 60ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கனமழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.