இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரங் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லோதா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு பின்னர் கடந்த 33 மாதங்களாக பிசிசிஐயில் தலைவர் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளும் வெற்றிடமாகவே உள்ளன. இந்த பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக யாரைத் தேர்வு செய்வது என வெகு நேரம் கலந்துரையாடப்பட்டது. இதில் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர்களான அனுராக் தாகூர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தங்கள் தரப்பில் இருந்து தலைவரைத் தேர்வு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருமித்த கருத்துக்களை எடுத்துள்ளனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியைத் பி.சி.சி.ஐ. தலைவராக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். நிர்வாகக் குழு தலைவராவும், அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும், அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜாயேஷ் ஜார்ஜ் இணைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிர்வாகிகள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. யார் யாருக்கு எந்தப் பதவி என்பது இறுதியாக முடிவு செய்துவிட்டதால் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
மும்பையில் வரும் 23ம் தேதி நடக்கும் ஆண்டு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொள்வார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி (47) கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார். தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவராக ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: