தங்கள் இறுதி ரக்பி உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஜப்பான் சென்றிருந்த கனடா அணி வீரர்கள் அங்குள்ள மக்களுடன் இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பானை தாக்கிய சூறாவளியால் அங்கு 33 பேர் பலியானதுடன், இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜப்பானின் பல பகுதிகளை வெள்ளம் மூடியுள்ளது. வீதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன.
இந்நிலையில் சூறாவளி காரணமாக ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த ரக்பி உலகக் கோப்பை போட்டி இடம்பெறவில்லை.
போட்டிக்காக சென்ற கனேடிய வீரர்கள் ஜப்பானில் உள்ள கமாஷியில் தங்கியிருந்தது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக எங்களால் விளையாட முடியவில்லை என்பது ஏமாற்றமே. ஆனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே என கனேடிய ரக்பி அணி தலைவர் டைலர் ஆர்ட்ரான் கூறியுள்ளார்.
சுமார் 15 கனேடிய ரக்பி வீரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிகாரிகள் இணைந்து புயலால் சேதமடைந்த பகுதிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: