பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குண்டு துளைக்காத அங்கி அணிந்து பிரசாரத்தில் ஈடுபட தான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் இருந்தாலும் தனது தேர்தல் பிரசாரத் திட்டங்களில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் ட்ரூடோ கூறியுள்ளார்.
எனது குடும்பத்தினர் மற்றும் அனைத்து கனடியர்களின் பாதுகாப்பு குறித்தே நான் கவலை கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் குண்டு துளைக்காத அங்கி அணிந்து லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவரது இந்த செயற்பாட்டை பாதுகாப்பு பிரச்சினையோடு ஒப்பிட்டு ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
இதனையடுத்து இது குறித்து ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரச்சாரம் ஒன்றில் கருத்து வெளியிட்ட ட்ரூடோ, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதை ஒப்புக்கொண்டார். இருந்தாலும் தனது பிரச்சார திட்டங்களில் மாற்றங்கள் இருக்காது என அவர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக இணையத் தளங்கள் ஊடாக தவறான தகவல்களை பரப்புவதுடன் கனேடியர்களை பயமுறுத்தும் முயற்சிகளில் சில நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கன்சர்வேடிவ் கட்சி கனடியர்களுக்கு பொய்களைக் கூறிவருகிறது. அவர்கள் வாக்களிக்கவுள்ள மக்களை பயமுறுத்துகிறார்கள் எனவும் லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ சாடினார்.
இதேவேளை, ட்ரூடோவின் இந்தக் குற்றச்சாட்டுக்களை கன்சர்வேடிவ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சைமன் ஜெஃப்ரீஸ் நிராகரித்துள்ளார்.
வாக்காளர்களை கவரும் நோக்கில் ட்ரூடோ தவறான தகவல்களைப் பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கனேடியப் பிரதமருக்கு மின்னஞ்சலில் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல் எவ்வாறானது? என்பது குறித்து மேலதிக தகவல்களை அக்கட்சி தெரிவிக்கவில்லை.
தலைவரின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க முடியாது என லிபரல் கட்சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.