ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுநிலைப்பாட்டினை எடுப்பது தொடர்பிலான ஐந்தாவது நாள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெறுகின்ற இன்றைய சந்திப்பில் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்குகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 2மணியளவில் குறித்த கூட்டம் தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும்,
புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர், மூத்த சட்டத்தரணி ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே இந்தக் கூட்டம் பற்றி கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், சந்திப்பு சுமூகமாக நடைபெறுவதாகவும் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.