ஆறு கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் கடுமையான நிபந்தனையால் இணக்கப்பாடு இன்றி காரசாரமான விவாதம் தொடர்வதாக நிகழ்விடத்திலிருந்து அருவி இணையத்தள செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அரசியல் தீர்வும் திட்டம் தொடர்பிலான இடைக்கால வரைபை நீக்குவதற்கு ஜனாதிபதி வேட்பாளர் உடன்படவேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திவருகின்றார்.
ஏனைய ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் குறித்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் கடும் கருத்து மோதலில் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினருடன் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கின்ற எமது செய்தியாளர்,
ஏனைய ஐந்து கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்ற போதிலும் இரண்டு மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் தொடரும் இழுபறியால் இதுவரையில் முடிவினை எட்டமுடியாத சூழல் நிலவுவதாகத் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே நான்கு நாட்கள் தொடர்ந்திருந்த சந்திப்பில் மூன்று சந்திப்புக்களில் கட்சிகளின் கீழ் நிலை உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தனர். நேற்றைய சந்திப்பிலேயே கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்குகொண்டிருந்தனர்.
நேற்றைய சந்திப்பும் குழப்பத்துடன் முடிவடைந்ததால் அதன் தொடராக இன்று சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இன்றைய கூட்டம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.