ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொது நிலைப்பாட்டினை எடுப்பதற்காக யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளின் ஒப்பந்தத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று பிற்பகல் திருநெல்வேலியில் தனியார் விருந்தினர் விடுதியில் ஐந்தாவது சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
சந்திப்பின் தொடக்கம் முதலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சமஸ்டி, அரசியல் தீர்வும் திட்டம் தொடர்பிலான இடைக்கால வரைபை நீக்குவது ஆகிய இரண்டு விடயங்களையும் தீவிரமாக வலியுறுத்தி வந்தது. ஆனாலும் ஏனைய ஐந்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் இந்த விடயங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஒன்றியப் பிரதிநிதிகளை கஜேந்திரகுமார் கடுமையாக சாடிய நிலையில் இரண்டு தரப்புக்கும் இடையில் கடுமையான கருத்து மோதல் நிகழ்ந்துள்ளது.
கருத்து மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே ஏனைய கட்சிகள் ஐந்தும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன. இதனை அடுத்து கஜேந்திரகுமார் அங்கிருந்து வெளியேறியதாக தெரியவருகிறது.