காப்பான் படத்தின் வெற்றியை அடுத்து சூரரை போற்று படத்தை முடித்துள்ளார் நடிகர் சூர்யா. இதற்கு பின்னர் ஹரி இயக்கும் படத்திலும், அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார் சூர்யா என்று செய்திகள் உலா வருகிறது.
என்ஜிகே படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் காப்பான் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தார் நடிகர் சூர்யா. இந்த படம் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. நல்ல வசூல், விமர்சனம், ரசிகர்களின் வரவேற்பு என்று மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கிடையில இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கும் சூரரை போற்று படத்தையும் முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் சற்றே தள்ளி போய் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இது சிங்கம் சீரிஸ் படமாக இருக்குமா அல்லது புதிய கதையா என்பது விரைவில் தெரிந்து விடும். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். இதற்கு முன்பு சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. வெகு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கூட்டணி இணைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விநியோக உரிமையையும் வேல்ஸ் நிறுவனம்தான் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.