ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கொண்ட புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரவுகானி இன்று தெரிவித்துள்ளார்.
80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் அரச தொலைக்காட்சியில் இன்று உரையாற்றும்போது அவர் கூறினார்.
ஈரானிய எண்ணெய் விற்பனைக்கு நீங்கள் தடைவிதித்துள்ள நிலையில் நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் 53 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது என்பதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சொல்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஈரானின் இந்த அறிவிப்பில் புதிய எண்ணெய் வயலில் இருந்து எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்? என்பது தொழில்நுட்பட ரீதியில் வெளிப்படுத்தவில்லை என சர்வதேச எண்ணெய் ஆலோசகர் மனோச்செர் தாகின் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அரசியல்வாதியால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களை கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடடார்.
உண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயலில் 53 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருக்கிறதா? அதை மீட்டெடுக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது.
அது எண்ணெயாக இருந்தாலும் கூட 20 அல்லது 30 சதவிகிதத்தை மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்று நான் கூறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒன்றைக் கண்டுபிடிப்பது வேறு. அதனை உருவாக்குவது என்பது வேறு என்று அவர் கூறினார்.
நிச்சயமாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்ய அதிக நேரம் எடுக்கும். இது கண்டுபிடிக்கப்படும் எண்ணெய் மூலத்தின் பண்புகளைப் பொறுத்தது எனவும் சர்வதேச எண்ணெய் ஆலோசகர் மனோச்செர் தாகின் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம்கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஈரான் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியது.
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து வருகிறது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சமீபகாலமாக ஈரான் தனது நாட்டின் பெட்ரோல் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.