ஹொங்கொங்கில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி நாளை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங் கல்வி அமைச்சு இன்று புதுன்கிழமை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
இதேவேளை, போராட்டத்தைக் கைவிட்டு அமைதி வழிக்குத் திரும்புமாறு ஹொங்கொங் அரச நிர்வாகம் போராட்டக்காரர்களைக் கோரியுள்ளது.
சீனாவின் தன்னாட்சி அதிகாரம் மிக்க பிராந்தியமான ஹொங்கொங்கில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தீவிர போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இன்றுடன் மூன்றாவது நாளாக அங்கு பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்கள் உச்சக்கட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
முக்கிய வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மூடியுள்ளனர். இதனால் போக்குவரத்து முடங்கியதோடு பல பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன.
மத்திய நிதி வட்டாரத்தில் ஒன்று திரளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நேற்று வீதிகளில் குவிந்த நூற்றுக்கணக்கான அலுவலகப் பணியாளர்கள், அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
பல பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். வீதிகளில் செங்கற்கள் சிதறிக் கிடந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பெரும் எண்ணிக்கையில் கலகத் தடுப்பு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அத்துடன் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதுடன், கடும் தாக்குதல் நடத்தி பலரைக் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கைது செய்யப்பட்டோரை விடுவிக்குமாறு தமது போராட்டத்தை மேலும் தீவிரமாக்கினர்.
ஹொங்கொங் - சீனப் பல்கலைக்கழகம் உட்பட 11 உயர் கல்வி நிலையங்களில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கைகலப்பில் பலர் காயமடைந்தனர். இதனால் வகுப்புகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளை ஹொங்கொங் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.