நாட்டில் கடந்த 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது இம்முறை நடைபெறவுள்ள தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் குறைவாகவே பதிவாகியுள்ளன என்று பெப்ரல் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது 4 கொலைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. எனினும், இம்முறை அவ்வாறு கொலைச் சம்பவங்களோ அல்லது பாரிய வன்முறைகளோ பதிவாகவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொலை, கூரிய ஆயுதத்தால் தாக்கிக் காயப்படுத்தல், தாக்குதல், கடத்தல், குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூடு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல், சொத்துக்களைச் சேதப்படுத்தல் மற்றும் அரசியல் கட்சி காரியாலயங்களை சேதப்படுத்தல் போன்ற பாரிய வன்முறை சம்பவங்கள் இம்முறை குறைவடைந்துள்ளன.
மேற்கூறிய குற்றங்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 502 உம், 2015ஆம் ஆண்டு 190 உம், இவ்வருடம் 68 உம் பதிவாகியுள்ளன.