கனேடிய பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரி ஒட்டாவாவில் உள்ள போர் நினைவுச் சின்னம் அருகே கல்கரியைச் சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளர் முகாமிட்டுள்ளார்.
பிரதமரைச் நேரில் சந்தித்து காலநிலை மாற்றம் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு கடிதத்தை ஒப்படைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான அனுமதி கிடைக்கும்வரை தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் பிரதமரைச் சந்திக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதாக ஒட்டாவாவில் முகாமிட்டுள்ள கல்கரியைச் சேர்ந்த காலநிலைச் செயற்பாட்டாளர் காக்னிடோ தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளில் இருந்து கனடாவையும் இந்த உலகத்தையும் பாதுகாக்க தனிப்பட்ட முறையிலும் அரசியல் வாதியாகவும் மிகவும் அர்பணிப்புடன் செயற்படுமாறு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக காக்னிடோ கூறினார்.
இதேவேளை, காலநிலை செயற்பாட்டாளர் கோரிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்புகின்றனர். முடிந்தவரை விரைவாக அனைத்துக் கடிதங்களுக்கும் பதிலளித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒட்டாவாவில் போர் நினைவுச் சின்னம் அருகே முகாமிட்டுள்ள நபர் குறித்து கண்காணித்து வருவதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.