எனக்கு கொள்ளி வைக்கக்கூட பிள்ளை இல்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயார் ஒருவர் இன்று கதறி அழுத சம்பவம் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்தில் இடம்பெற்றது.
சர்வதேச மனித உரிமை தினத்தை ஒட்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பரவலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
முல்லைத்தீவில் 1008 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டதுடன் உறவுகளுக்கு நீதி கோரி கோசங்களையும் எழுப்பினர்
அங்கு திரண்டிருந்த தாய் மாரும் உறவுகளும் தங்கள் உறவுகள் தொடர்பில் கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளை அங்கிருந்த தாய் ஒருவர் தனக்கு ஒரே ஒரு பிள்ளை என்றும் அந்தப் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாகவும் தனக்கு கொள்ளி வைக்கக்கூட பிள்ளை இல்லை என்றும் கதறி அழுதமை ஆற்றாத துயராக காணப்பட்டது.