ஊடகவியலாளர் சந்திப்பில் சொல்லப்பட்ட வெள்ளை வான் தொடர்பாக விசாரணை செய்யாமல், அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்வது பிரச்சினைக்குரியதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வெள்ளை வான் என்பது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான பிரச்சினை. யாராவது வந்து அது தொடர்பாக தனக்குத் தொடர்புள்ளது என்று கூறினால் அது பற்றித் தேடிப் பார்க்க வேண்டும்.
அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? அத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெற்றது? அவற்றுக்கு வேறு சாட்சிகள் உள்ளதா? என்று ஆராயப்பட வேண்டும்.
அதைவிடுத்துவிட்டு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த அரசியல்வாதியைக் கைதுசெய்வதில் எந்தப் பலனும் இல்லை. இத்தகைய செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டனம் செய்கின்றது.
உண்மையில் கடந்த காலத்தில் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றன என்று எம் அனைவருக்கும் தெரியும். உதாரணத்துக்கு நானே இத்தகைய சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றில் சட்டத்தரணியாக ஆஜராகியிருக்கின்றேன்" - என்றார்.