ஈராக் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 4 அமெரிக்க தூதரகங்களை தாக்குவதற்கு ஈரான் குட்ஸ் படையணி தளபதி காசிம் சுலைமானி சதி திட்டம் தீட்டினார். அதனாலேயே அவரை கொல்ல தான் உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தபோது ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.
சுலைமானி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் அடித்து, நொருக்கி, தீவைத்து சூறையாடினர். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது.
அந்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை செய்தது யார்? என்பது உங்களுக்கு தெரியும். அவர் தற்போது உயிரோடு இல்லை.
அவர் பாக்தாத் தூதரகத்தை மட்டும் குறிவைக்கவில்லை. இது தவிர மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 3 அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியிருந்தார். இதுபற்றிய உளவு தகவல்கள் கிடைத்த பிறகு அவரை கொலை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தேன் எனவும் ட்ரம்ப் கூறினார்.