"தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என்று அரசு எந்தத் தடையையும் விதிக்கவில்லை" என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தமிழ் ஊடகங்களின் தலைமை செய்திப் பொறுப்பாளர்களை – பத்திரிகை ஆசிரியர்மாரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"தேசிய கீதம் தற்போது தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்படுகின்றது. இந்தநிலையில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என்று அரசு எந்தத் தடையையும் விதிக்கவில்லை. அரசில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தால் அது அவர்களின் கருத்தாக இருக்குமே தவிர அது அரசின் கருத்தாக இருக்காது. அப்படியொரு நிலைப்பாட்டை அரசு எடுக்கவில்லை.
ஆனால், சிங்கப்பூர், கனடா, இந்தியா போன்ற நாடுகளைப் போல் தேசிய கீதம் ஒரு மொழியில் இருக்கலாம். அதேசமயம் இங்கு நான் ஒரு தமிழ் பாடசாலைக்குப் போனால் அங்கு தமிழில் தேசிய கீதம் பாடுகின்றார்கள். தென்பகுதியில் நிகழ்வுகளுக்குச் சென்றால் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது. பிரதேச ரீதியாக இவை அமுலில் உள்ளன. ஆனால், யாரும் அதனைத் தடை செய்யவில்லை. தேசிய கீதம் தமிழில் பாட வேண்டும் எனச் சொல்லப்படுவது அரசியல் தேவைகளுக்காகவே. அதுதான் உண்மை" - என்றார்.