பத்திரிகை ஒன்று பிரசுரித்திருந்த ஒளிப்படம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிற்கும் பாடசாலைச் சீருடை அணிந்த பிள்ளையை தன்னுடைய பிள்ளை என்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்திருந்த நிலையில் ஒரு குடும்பத்தினை அழைத்து ஜெயவனிதாவிற்கும் கணவருக்கும் இரண்டாம் மாடி விசாரணைப் பிரிவினர் அடையாளப்படுத்துவதற்காக முன்நிறுத்திய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவர் ஜெயவனிதா, தன்னுடைய பிள்ளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒளிப்படம் ஒன்றில் பாடசாலை சீருடையில் காணப்படுகின்ற பத்திரிகைச் செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி தன்னுடைய பிள்ளை என்று தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய நாள் விசாரணைக்காக அழைத்த இரண்டாம் மாடி விசாரணைப்பிரிவினர், ஒரு குடும்பத்தினரை அழைத்து முற்படுத்தியிருக்கின்றனர். அந்தக் குடும்பத்தில் காணப்பட்ட பெண் பிள்ளை தான் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒளிப்படத்தில் காணப்படுகின்ற பிள்ளை என்று தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இன்றுடன் இந்த பிரச்சினையை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில் அதற்கு மறுப்புத் தெரிவித்த ஜெயவனிதா, குறித்த பிள்ளை ஒளிப்படத்தல் காணப்படும் பிள்ளை அல்ல என்றும் தான் போராட்டத்தில் இருந்து ஒதுங்கப்போவதில்லை என்றும் அனைத்து பிள்ளைகளும் விடுவிக்கப்படவேண்டும் என்றே தான் போராடி வருவதாகவம் தெரிவித்தாக இன்று வவுனியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.