தமிழர் திருநாளான பொங்கல் விழாவை திராவிடர் திருநாளாக திராவிடர் கழகமானது கொண்டாடிவருகிறது. சென்னையில் உள்ள பெரியார் திடலில் இதையொட்டி வரும் 16, 17 ஆகிய நாள்களில் தொடர்கொண்டாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திராவிடர் கழகம் சார்ந்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில், அதன் 26ஆம் ஆண்டு விழாவையொட்டி வரும் 16, 17 ஆகிய நாள்களில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் 16 மாலை 4 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கும். அலங்காநல்லூர் வேலு ஆசானின் சமர் கலைக் குழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் இதைத் தொடங்கிவைக்கிறார்.
இரண்டாம் நாள் வெள்ளி மாலை 4 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கும். பறையிசை, சொல்லிசை, கானா, பீட் பாக்சிங், இப்ஆப் நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் ஆகியவை நிகழ்த்தப்படவுள்ளன. ‘கெடுப்பதூவும் எடுப்பதூவும்!’ என்னும் தலைப்பில் பேராசிரியர் அரசு செல்லையா (அமெரிக்கா) கருத்துரையாற்றுகிறார்.
இதில், ஆண்டுதோறும் இம்மன்றத்தின் சார்பில் பல்துறை வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டு பெரியார் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பெரியார் விருதுக்கு, திரைப்பட நடிகர் சின்னி செயந்த், இசையமைப்பாளர் மு.சிப்ரான், மக்களிசைப் பாடகர் த.வேல் முருகன், வி.சி.சந்தோசம், பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.