இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து சிம்ரோன் ஹெட்மயர் மற்றும் எவின் லூயிஸ் ஆகியோர் உடல் தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியுடன் 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்களிலும் ஆட உள்ளது. அதற்கான அணியினருக்கான உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட்டபோது சரியான நேரத்திற்கு வருகைதராத காரணத்தினால் தமது உடற் தகுதியை நிரூபிக்க முடியாமல் போயிருந்த ஹெட்மயர் மற்றும் லூயிஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 208 ஓட்டங்களை பெற்று சிறந்த துடுப்பாட்ட பெறுதியை வெளிப்படுத்தியிருந்த லூயிஸ் மற்றும் ஹெட்மயர் ஆகியோரின் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை துரதிஸ்டமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், சூப்பர்-50 கோப்பைக்கான தொடரில் 96.20 சராசரியுடன் 481 ஓட்டங்களைப் பெற்றிருந்த அனுபவ வீரரான டெரன் பிராவோவும், அதே தொடரில் ஜமைக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 160.93 ஸ்ட்ரைக் ரேட் உடன் 412 ஓட்டங்களை எடுத்திருந்த சகலதுறை ஆட்டக்காரர் ரோவ்மன் பவல் உள்ளிட்ட சிறந்த வீரர்களுடன் களமிறங்க உள்ளதால் உள்நாட்டில் பலமான இலங்கை அணிக்கு சிறந்த போட்டியை கொடுக்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாது ஒருநாள் போட்டி வரும் 22 ம் திகதி பகல் ஆட்டமாக கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: