துருக்கி இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற துருக்கி பிறிமியர் லீக் கால்ப்பந்து போட்டி ஒன்றின் நடுவே திடீரென மைதானத்துக்குள் புகுந்த நாய் ஒன்று பந்தைத் தட்டிவிட்டு தானும் விளையாட முயன்றது அங்கிருந்தவர்களை ஆரவாரத்தோடு கோஷமிடவைத்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருந்த இந்தப் போட்டி தொலைக்காட்சி ஒன்றில்; நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றது.
இந்த நாய் கைப்பற்றிக்கொண்ட பந்தைத் திரும்பப் பெற போட்டி நடுவர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போராட வேண்டி ஏற்பட்டது. எனினும் அந்த நாயோ மைதானத்தில் இருந்து வெளியேற மறுத்தது.
இறுதியாக பந்தை மைதானத்துக்கு வெளியே எறிந்தால் அதை எடுக்க நாய் வெளியே ஓடும் என கருதி பந்தை வெளியே எறிந்தனர்.
ஆனால் விரைந்து சென்று பந்தை எடுத்த நாய் அதை மீண்டும் வாயில் கௌவிக்கொண்டு மைதானத்துக்குள் நுழைந்தது.
பின்னர் நடுவர்கள் மற்றும் கால்ப்பந்து விளையாட்டு வீரர்கள் இணைந்து அந்த நாயை தூக்கிச் சென்று மைதானத்திலிருந்து வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வடகிழக்கு துருக்கியைச் சேர்ந்த கீரேசுன்ஸ்போரைப் எதிர்த்து விளையாடிய ஃபாத்தி கராகம்ருக் ஸ்போர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.