சீன நகரமான வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனை பணிப்பாளரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லியு ஜிமிங் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்தத் தகவலை சீன அரச தொலைக்காட்சியான சி.சி.டி.வி. தெரிவித்துள்ளது.
சீனாவின் தொற்று நோய் பரப்பலின் மையமான ஹூபே மாகாணத்தில் நோயாளர்களைக் காப்பாற்ற போராடிவரும் மருத்துவர்களும் மருந்து பணியாளர்களும் தொற்றுக்குள்ளாவதுடன், உயிரழந்த சம்பங்களும் சமீபகாலமாக பதிவாகி வருகின்றன.
ஹூபே மாகாணத்தில் ஏற்கனவே ஆறு மருத்துவர்கள் உயிரழந்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 1700 பேர் வரை கொரோனோ வைரஸ் தெற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சீன சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் வுஹான் - வுச்சாங் மருத்துவமனையின் பணிப்பாளரும் சிரேஷ்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லியு ஜிமிங் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார் என்று சீன அரச தொலைக்காட்சியான சி.சி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, வுஹான் நகரில் உள்ள மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பி வழியும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து 25,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை கடந்த 14-ஆம் திகதி ஹூபே மாகாணத்துக்கு சீன அரசு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.