வன்னிமாவட்டத்தின் வனவளதிணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும், வனவிலங்குகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, தீர்க்கும் விதமான கலந்துரையாடல் ஒன்று வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது வனவளதிணைக்களத்தினால் காணிகள் விடுவிக்கப்படாமையினால் பல்வேறு காணிகளிற்கான அனுமதி பத்திரங்களை பொதுமக்களிற்கு வழங்கமுடியாமல் இருப்பதாக பிரதேச செயலாளர்களால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக வ்வுனியா வடக்கு காஞ்சூர மோட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியமர்ந்த நிலையில் அவர்களது 400 ஏக்கர் அளவிலான காணிகள் வனவளதிணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நீண்டகாலம் களித்து மீளத்திரும்பிய மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக பொது அமைப்புகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
போரால் பொதுமக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் அவர்களது காணிகளில் காடுகள் வளர்ந்துள்ளமையால் அவற்றை வனவள திணைக்களம் எல்லையிட்டுள்ளதாகவும், எமது காணிக்குள் பழைய கட்டடங்கள், கிணறுகளின் எச்சங்கள் இருக்கும் நிலையிலும் அவை தொடர்பில் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கிராம பொது அமைப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவை தொடர்பாக தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி இவ்விடயங்களில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால, வன்னிமாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.