கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கம்போடியாவில் 2257 பேருடன் தனித்து விடப்பட்ட வெஸ்டர்டாம் உல்லாசப் பயணக் கப்பலில் ஒரு வாரம் சிக்கித் தவித்த பயணிகள் அனைவரும் இன்று புதன்கிழமை கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கப்பல் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததை அடுத்து அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிவல் கார்ப் நிறுவனத்தின் எம்.எஸ். வெஸ்டர்டாம் உல்லாசப் பயணிகள் கப்பல் கடந்த 13-ஆம் திகதி கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்திற்கு வந்தது.
ஹொங்கொங்கிலிருந்து வெளியேறிய இந்தக் கப்பலை நிறுத்த ஜப்பான், தாய்வான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக அனுமதி அளிக்கவில்லை.
இதனையடுத்து கப்பலை நிறுத்த கம்போடியா அனுமதி அளித்தது. அதன் பின்னர் கப்பலில் இருந்து அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரேனோ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்தே கப்பலில் வந்த பயணிகள், பணியாளர்கள் அனைவரும் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை இடம்பெற்றது. இதில் வேறு யாருக்கும் தொற்று அறிகுறிகள் காணப்படாததை அடுத்து அவர்கள் இன்று வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பயணிகள் அனைவரும்; அவரவர் சொந்த நாடுகளுக்குப் புறப்படவுள்ளனர்.