அவுஸ்திரேலியா - மெல்போர்னுக்கு வடக்கே மங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு சிறிய ரக விமானங்கள் இன்று நடு வானில் மோதி விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியதில் 4 பேர் பலியாகினர்.
4 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இதனையடுத்து இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தவாறு மெல்போர்னுக்கு வடக்கே மங்களூர் விமான நிலையத்திற்கு அருகில் விழுந்தன. இரு விமானங்களிலும் இருந்த தலா 2 பேர் உயிரிழந்தனர்.
மேகமூட்டம் காரணமாக இரு விமானிகளும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க முடியாத நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அவுஸ்திரேலிய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விமானங்களிலும் தலா இரண்டு பேர் இருந்தனர். இரு விமாங்களும் வேறு-வேறு விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டன எனவும் பொலிஸார் கூறினர்.
இரண்டு விமானங்களும் ஏன் ஒரே பாதையில் பறந்தன? என்ன நோக்கத்துக்காக பறந்தன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று விக்டோரியா பொலிஸ் அதிகாரி பீட்டர் கோகர் கூறியுள்ளார்.
இதேவேளை, விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக சில அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் சிக்கிய ஒரு விமானம் மூராபின் ஏவியேஷன் என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் எனவும் மற்ற விமானம் தியாபில் உள்ள ஐலண்ட் ஏரோ கிளப்பில் இருந்து இயக்கப்படும் விமானம் எனவும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.