"மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்தத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசின் திட்டமாகும்."
- இவ்வாறு நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசு திட்டமிட்டிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையில் நடத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளைத் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.
இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
அத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டு வருவது தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கும் அதிக காலம் சென்றுள்ளது. அதனால் மாகாண சபைகளினால் மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சேவைகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது.
கடந்த காலங்களில் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படும் சேவை தொடர்பாகப் பார்க்கும்போது, மாகாண சபை தேவையா? இல்லையா? என்பது வேறு விடயம். அது தொடர்பாக வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
எனினும், தற்போதுள்ள சட்டத்துக்கமைய நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்போம். அதற்குத் தேவையான சட்ட வரைபுகளைத் தயாரித்து வருகின்றோம்" - என்றார்.