யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நபர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகலைச் சேர்ந்தவர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம்மேலும் தெரிவித்துள்ளார்.
இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இலங்கையில் 146 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே யாழில் அடையாளம் காணப்பட்ட நபர் ஒரு மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை பிந்திய தகவலின் அடிப்படையில் அண்மையில் சுவிஸிலிருந்து வந்திருந்த மத போதகருடன் தொடர்புபட்டிருந்த பிறிதொரு போதகரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
2ஆம் இணைப்பு:-
சுவிஸிலிருந்து வந்த மத போதகர் பங்குகொண்ட வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இருபது பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு கொரோனா அறிகுறி இல்லாத போதிலும் கொரோனா தொற்றுத் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது ஒன்பது பேருக்கு கொரோனா நோய்த் தாக்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளபோதிலும் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். குறித்த மத போதகர் மானிப்பாயைச் சேர்ந்தவர் என்றும் அவர் கொழும்பு கொரோனா தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுவிஸ் மத போதகர் பங்குகொண்ட நிகழ்வில் பங்கெடுத்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் 06ஆம் திகதி விடுவிப்பதாக நேற்றைய தினம் பணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில் அதில் கால தாமதம் ஏற்படலாம் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்