யாழ்ப்பாணம் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா சந்தேக நபர்களில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
சுவிஸ் போதகர் பங்கேற்ற வழிபாட்டில் பங்குகொண்ட இருபது பேர் பலாலியில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பத்துப்பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு அவர் வெலிக்கந்தை கொரோனா தடுப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை வெளியாகிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.( இதற்கு முந்தைய செய்தியில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. )
ஆகவே இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
இம்மூவரும் குறிப்பிட்ட நேரடியாக போதகரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.
ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்